நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை.
அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் இஸ்லாமாபாத்திற்குக் கிளம்பத் தயாராக இருந்திருக்கின்றனர்.
ஆனால், ‘அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தை நடத்துவதை நாங்கள் ஏற்கமாட்டோம்’ என்று ஈரான் தரப்பு தெளிவாக இருந்தது.
அதனால், ஈரான் இஸ்லாமாபாத்திற்கு வர ரெடியாக இல்லை.
இதனால், நேற்று நடக்கவிருந்த பேச்சுவார்த்தை நடக்கவில்லை. ஆனால், தேதி தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.
‘போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாது’ என்று ட்ரம்ப் முன்பு கூறியிருந்தார். இந்த நிலையில், பேச்சுவார்த்தை நடக்காதது மீண்டும் போரைத் தொடங்குமா என்கிற கேள்வி எழுந்தது. ஆனால், இந்தக் கேள்விக்கு ட்ரம்பே தனது ட்ரூத் பக்கத்தில் விடை கொடுத்துவிட்டார்.
“ஈரான் அரசாங்கம் தற்போது பிளவுபட்டுள்ளது என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டு, அது எதிர்பாராத ஒன்றல்ல என்பதாலும், பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், ஈரான் நாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒரு ஒருங்கிணைந்த முன்மொழிவை முன்வைக்கும் வரை, அந்த நாட்டின் மீதான எங்களது தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளோம்.

எனவே, கடற்படை முற்றுகையைத் தொடரவும், மற்ற அனைத்து அம்சங்களிலும் தயார் நிலையில் இருக்கவும் எங்களது ராணுவத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
அவர்களின் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, அதன் மீதான விவாதங்கள் ஏதோ ஒரு முடிவுக்கு வரும் வரை இந்தப் போர்நிறுத்தத்தை நான் நீடிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ட்ரம்பின் இந்தப் போர் நிறுத்த அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது…
“எனது சார்பாகவும், ஃபீல்ட் மார்ஷல் சையத் ஆசிம் முனீர் சார்பாகவும், தற்போது நடைபெற்று வரும் ராஜதந்திர முயற்சிகள் தொடர்வதற்கு ஏதுவாக, போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையைக் கனிவுடன் ஏற்றுக்கொண்ட அதிபர் டிரம்ப் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கை மற்றும் உறுதியின் அடிப்படையில், இந்த மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் தனது நேர்மையான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்.

இரு தரப்பினரும் தொடர்ந்து போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பார்கள் என்றும், இஸ்லாமாபாத்தில் திட்டமிடப்பட்டுள்ள இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையின் போது, இந்த மோதலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான ஒரு விரிவான ‘அமைதி ஒப்பந்தத்தை’ எட்ட முடியும் என்றும் நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்”
ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தம் குறித்து ஈரான் தரப்பில் இருந்து இன்னும் எதுவும் குறிப்பிடப்படவில்லை.




