உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்றது முதல், குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக ‘Zero-Tolerance’ (பூஜ்ஜிய சகிப்புத்தன்மை) கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஒன்பது ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள குற்ற கும்பல்களை ஒடுக்க காவல்துறை பல்வேறு என்கவுன்ட்டர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் உதவியுள்ளதாக அரசு தரப்பில் நியாயப்படுத்தப்படுகிறது.
ஒட்டுமொத்த என்கவுன்ட்டர் புள்ளிவிவரங்கள்
கடந்த ஒன்பது ஆண்டுகளில் உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 17,043 காவல்துறை என்கவுன்ட்டர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அதிரடி என்கவுன்ட்டர் நடவடிக்கையில், தேடப்பட்டு வந்த 289 பயங்கர குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 34,253 குற்றவாளிகள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளின்போது ஏற்பட்ட மோதல்களில், 11,834 எதிரிகள் காயம் அடைந்துள்ளனர்.
குற்றவாளிகளுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கையில் உத்தரப் பிரதேச காவல்துறையினரும் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களில் 18 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மரணமடைந்துள்ளனர். இதுமட்டுமன்றி, பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற என்கவுன்ட்டர் சம்பவங்களின்போது 1,852 காவல்துறை பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மாநிலத்திலேயே அதிகப்படியான என்கவுன்ட்டர் நடவடிக்கைகள் மேற்கு உ.பி-யின் மீரட் மண்டலத்தில்தான் அரங்கேறியுள்ளன. மண்டல வாரியாக டாப் 3 இடங்களைப் பிடித்த பகுதிகளில் முதலிடம் மீரட். காவல்துறையினர் நடத்திய 4,813 என்கவுன்ட்டர் நடவடிக்கைகளில் 8,921 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டனர் மற்றும் 3,513 பேர் காயமடைந்தனர். இதில் மாநிலத்திலேயே மிக அதிகமாக 97 முக்கிய குற்றவாளிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். 477 போலீஸார் காயமடைந்தனர், 2 போலீஸார் உயிரிழந்திருக்கின்றனர்.
மீரட்டுக்கு அடுத்த இடத்தில் வாரணாசி இருக்கிறது. இந்த மண்டலத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 1,292 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டு, 2,426 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த மோதல்களில் 29 குற்றவாளிகள் கொல்லப்பட்டதோடு, 907 குற்றவாளிகளும் 104 போலீஸாரும் காயமடைந்தனர். மூன்றாவது இடத்தில் ஆக்ரா இருக்கிறது. ஆக்ரா மண்டலத்தில் மொத்தம் 2,494 என்கவுன்ட்டர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 5,845 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டனர், 968 பேர் காயமடைந்தனர் மற்றும் 24 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவங்களில் 62 போலீஸாரும் காயமடைந்தனர்.

இதுதவிர பரேலி மண்டலத்தில் நடைபெற்ற 2,222 என்கவுன்ட்டர்களில் 21 பயங்கர குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். லக்னோ மண்டத்தில் நடந்த 971 என்கவுன்ட்டர் நடவடிக்கைகள் மூலம் 20 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கான்பூர் மண்டலத்தில் 791 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டு, அதில் 12 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். பிரயாக்ராஜ் மண்டலத்தில் 643 என்கவுன்ட்டர்களில் 11 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். கோரக்பூர் மண்டலத்தில் நடத்தப்பட்ட 699 என்கவுன்ட்டர்களில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
மாநிலத்தின் முக்கிய மாநகர காவல் கமிஷனரேட்களிலும் குற்றவாளிகளுக்கு எதிரான வேட்டை தீவிரமாக நடைபெற்றது. இதில் காசியாபாத் கமிஷனரேட் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
உத்தரப் பிரதேச அரசு குற்றவாளிகளாக கருதப்படுபவர்களை ஒடுக்க வெறும் என்கவுன்ட்டர்களை மட்டும் நம்பியிருக்காமல், பல்வேறு கடுமையான சட்டப்பிரிவுகளையும் இணையாகப் பயன்படுத்தியுள்ளது. குற்றவாளிகளின் சட்டவிரோத சொத்துக்களைப் பறிமுதல் செய்தல் மற்றும் இடித்தல், ‘கேங்ஸ்டர் சட்டத்தின்’ (Gangster Act) கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தல் மற்றும் ‘தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்’ (NSA) கீழ் குண்டர்களைக் கைதுசெய்தல் போன்ற நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.




