2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை, தி.மு.க கூட்டணிக்குள் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. இருக்குமா அல்லது வெளியேறி தவெக பக்கம் போகுமா என கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேல் விவாதத்தைக் கிளப்பி விட்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஒருவழியாக தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு விட்டன.
தேமுதிகவுக்கும் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், ஆனால் தொகுதிகளை அறிவிப்பதை பிறகு செய்யலாம் என இரண்டு தரப்பும் நினைப்பதாகவும் சொல்லப்படுகிறது.
வி.சி.க. கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதில் ம.தி.மு.க – தி.மு.க இடையே கூட்டணி ஒப்பந்தம் குறித்துதான் கடந்த சில தினங்களாக பரபரப்பான பேச்சுகள் உலா வருகின்றன.
2021 தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் நின்றது அந்தக் கட்சி. அப்போது துரை வைகோ கட்சிக்குள் வந்திருக்கவில்லை.
அவர் என்ட்ரி ஆன பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் நிற்க மறுத்து தனிச் சின்னத்தில் நின்று வென்றார் அவர்.
இந்த முறையும் உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க திமுக தலைமை வற்புறுத்துவதாக தகவல்கள் கசிகின்றன. முதல்வர் ஸ்டாலின் நேரடியாக வைகோவிடமே இது குறித்துப் பேசியதாகவும், ஆனால் வைகோ அந்த இடத்தில் எந்தப் பதிலும் சொல்லவில்லை என்றும் சொல்கிறார்கள்.
துரை வைகோவோ இந்த முறை நிச்சயம் தனிச் சின்னத்தில்தன் நிற்க வேண்டும், அப்போதுதான் கட்சிக்கு அந்தஸ்தை மீட்க அது உதவும் என நினைக்கிறாராம்.

ஆனால் தனிச் சின்னம் என்றால் சீட்டுகளின் எண்ணிக்கையை குறைப்போம் என்கிறதாம் திமுக தலைமை.
இந்தச் சூழலில்தான் கட்சியின் அவசர உயர்நிலைக் குழுக் கூட்டத்தை நாளை கூட்டியிருக்கிறார் வைகோ.
திமுக தலைமை தரும் அழுத்தம், தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படுமென்கிறார்கள்.




