மறுமலர்ச்சி திமுகவின் அதிராரபூர்வ ஏடான ‘சங்கொலி’யின் முப்பதாவது ஆண்டு விழா இன்று மாலை சென்னையில் நடக்கிறது.
வைகோ உரையாற்றவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கவிருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன். இந்து என்.ராம் மற்றும் தவெக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்த நக்கீரன் கோபால் ஆகியோரும் விழாவில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
இந்தச் சூழலில் கடந்த காலத்தில் தான் செய்த இரண்டு தவறுகள் என திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததைச் சுட்டிக்காட்டியிருக்கிறார், வைகோ.
கடிதத்தில் மேலும்,
“93ல் திமுகவிலிருந்து வெளியேறிய போது நடந்த சம்பவங்கள் என 2009 ம் ஆண்டு முரசொலியில் கடிதம் எழுதினார் கலைஞர், அவருக்குப் பிறகு திமுக தலைவராகும் ஆசை எனக்கிருந்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டார் கலைஞர்.
இதைச் சுட்டிக்காட்டி இரண்டு தினங்களுக்கு முன் சங்கரன்கோவில் செயல்வீரர்கள் கூட்டத்தில் நான் பேசினேன். அதைப் பொறுக்க முடியவில்லை. மீண்டும் நேற்று அதே பழைய பொய்யைத் தூசுதட்டி முரசொலியில் பரப்பியிருக்கின்றனர்.
என் மனதில் அன்றும் இன்றும் விசுவரூபம் எடுக்கும் ஒரே கேள்வி இதுதான். துரைமுருகனும் ஆற்காட்டாரும் கலைஞர் என்னை வெறுக்க வேண்டுமென என்னைப் பற்றி இல்லாததையும் பொல்லாதையும் அவரிடம் சொன்னார்களா அல்லது கலைஞருக்கே உரிய கற்பனை வளத்தால் அவிழ்த்து விடப்பட்ட கட்டுக்கதையா இது என்பதுதான்.

திமுகவினரிடமும் பொது மக்களிடமும் என் பெயரை மேலும் கெடுக்கும் நோக்கிலேயே இப்படிச் செய்து கொண்டு வருகின்றனர் இவர்கள்.
ஆனால் இத்தகைய தாக்குதல்களை தாங்கி அனுபவப்பட்டு விட்டேன்,
என் வாழ்க்கையில் நான் செய்த பெரும் தவறுகள் இரண்டு. ஒன்று 2006ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. அன்றைய மதிமுக தலைமை நிர்வாகிகள் என்னை நிர்ப்பந்தப்படுத்தி அந்தக் கூட்டணியை அமைக்க வைத்தார்கள். .
இரண்டாவது தவறு 2017 ல் பாஜகவை எதிர்ப்பதற்காக திமுகவுடன் கூட்டு சேர்ந்தது. இந்த இரு தவறுகளையும் நான் செய்திருக்கக் கூடாது. ஆனால் எல்லாம் கடந்த காலமாகி விட்டது. இனி நமக்கு யாரும் எந்தக் கேடும் செய்ய முடியாது. இனி நமக்கு வெற்றிதான்” எனக் குறிப்பிட்டிருக்கிறார் வைகோ.




