19
August, 2026

A News 365Times Venture

19
Wednesday
August, 2026

A News 365Times Venture

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! – பின்னணி என்ன?

Date:

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். ‘திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது’ என்று திமுகவிற்கு ஆதரவாக பேசிய திருமா பல இடங்களில் விமர்சித்தும் இருந்தார்.

இதனால் திருமா கூட்டணி முடிவில் தடுமாறுகிறாரா? என்ற கேள்விகளும் எழுந்தன.

திருமாவளவன் – விஜய்

தெளிவான முடிவு எடுக்க என்ன காரணம்?

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று முன்தினம் (ஆக.17) நடைபெற்ற தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் இனி தமிழ்த்தேசியத்தில் இணைந்தே பயணிக்கும்” என்று கூட்டணி குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

கையோடு மறுநாளே முதல்வர் விஜய்யையும் சந்தித்து நன்றி கூறி சில கோரிக்கைகளையும் முன்வைத்து வந்திருக்கிறார். தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட 3 மாதங்கள் முடிவடைந்த சூழலில் திருமா கூட்டணி குறித்து தற்போது தெளிவான முடிவு எடுக்க என்ன காரணம்? என்ற கேள்வியோடு பத்திரிகையாளர் சுவாமிநாதனிடம் பேசினோம்.

பாமக எம்.எல்.ஏ-க்களின் வாதங்களை முதல்வர் ரசிக்கிறார்!

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை, ஒரு முடிவை எடுப்பது என்பது ஒரு நிலை என்றால், அந்த முடிவை நோக்கி நகர்த்தப்படுவது என்பது மற்றொரு நிலை. திருமாவளவன் இந்த முடிவை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கிறார் என்பதே எனது பார்வை.

இதற்குச் சில முக்கியக் காரணங்கள் உள்ளன. சுதந்திர தினத்தன்று, காங்கிரஸின் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. கிருஷ்ணசாமியின் ஒரு மகன் காங்கிரஸில் எம்.பி-யாக இருக்கிறார்; மகள் தான் சௌமியா அன்புமணி.

சட்டமன்றத்தில் சௌமியா அன்புமணி தவெக-விற்கு எதிராகவும் பேசுகிறார். அதே சமயம் ஆதரவாகப் பேசினாலும் மிக நுட்பமாகவும், கூர்மையாகவும் பேசுகிறார். பாமக சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் மற்றும் வாதங்களை முதலமைச்சர் ரசிக்கும் சூழலும் உள்ளது.

பத்திரிக்கையாளர் சுவாமிநாதன்
பத்திரிக்கையாளர் சுவாமிநாதன்

தவெக-விற்குள் விசிக-வை விட பாமக வந்தாலும்.!

மற்றொரு விஷயம், தவெக கட்சிக்குள்ளேயே இருவேறு கருத்துப் பார்வைகள் உள்ளன. வட மாவட்டங்கள் உட்படப் பல இடங்களில் தவெக-வின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, அதிமுக-வைக் கரைப்பது (அழிப்பது அல்ல). சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்தாலும், 47 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதற்கு வட மாவட்டங்களில் பாமக கூட்டணியே முக்கியக் காரணமாக இருந்தது. இதனால், பாமக – அதிமுக இடையிலான உறவை உடைக்காமல் வட மாவட்டங்களில் அதிமுக-வைப் பலவீனப்படுத்த முடியாது என்ற சூழல் உள்ளது.

அதே நேரத்தில், தவெக-விற்குள் விசிக-வை விட பாமக வந்தாலும் நன்றாக இருக்கும் என்று பேசக்கூடிய குரல்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அது வெளிப்படையாக இல்லை. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் தவெக வெற்றி பெறவே இல்லை. அதிமுக வெற்றி பெற்ற 47 தொகுதிகளில் 34 தொகுதிகள் வட மாவட்டங்களில் வருகின்றன.

அதற்கு பாமக மிகவும் முக்கியமாக இருக்கும்…

ஏற்கனவே, தலித் ஓட்டு மற்றும் பட்டியலின சமுதாய வாக்குகள் விசிக கையில் இருந்த நிலையைத் தாண்டி, அதில் பெருமளவைத் தமிழக வெற்றி கழகம் கைப்பற்றிவிட்டது. ஒருவேளை எதிர்காலத்தில் திமுகவோ அல்லது அதிமுகவோ ஓபிசி (OBC) அரசியலை முன்னெடுத்தால், அதற்கு பாமக மிகவும் முக்கியமாக இருக்கும்.

இதனால்தான் பாமக-விடம் ஒரு மென்மையான போக்கைத் தவெக தொடர்ந்து கையாண்டு வருகிறது. முதன்முதலில் விஜய் அவர்கள் அன்புமணியைச் சந்தித்து உரையாடியதிலிருந்தே இது தொடர்கிறது. பாமக-விற்கு எதிர் துருவமாக தவெக இல்லை.

விஜய் - அன்புமணி
விஜய் – அன்புமணி

பாமக-விற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தான்.!

இந்தச் சூழலில்தான் சுதந்திர தின விழாவில் கிருஷ்ணசாமிக்குத் தகைசால் தமிழர் விருது வழங்கப்படுகிறது. இதனால் திருமாவளவனுக்கு ஒரு நெருக்கடி ஏற்படுகிறது. அதாவது “பாமக இடம்பெறும் அணியில் நாங்கள் இடம்பெற மாட்டோம்” என்பதில் உறுதியாக இருந்தால் மட்டுமே, அதிகாரத்தை நோக்கி நகர முடியும்.

கடந்த 100 நாட்களில் திருமாவளவன் திமுக-வுடன் நட்பாக இருப்பது குறித்துப் பல விஷயங்களைப் பேசினாலும், முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் வரலாறு அவருக்குக் கிடையாது. ஆனால், இவ்வளவு தடுமாற்றங்களுக்குப் பிறகு பாமக-விற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற இடத்தில் அவர் தவெகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

தன்னால் முடிந்த ஒரு முற்றுப்புள்ளியை..!

இதன் மூலம் தவெக-விற்கும் ஒரு செய்தியைச் சொல்கிறார். “நாங்கள் உங்களிடம் தெளிவாக இருக்கிறோம்; நாங்கள் ஆளுங்கட்சியாகிவிட்டோம்” என்ற வார்த்தையையும் அவர் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற அவரது எண்ணமும் நிறைவேறியுள்ளது. பாமக-விடம் ஒரு நல்லுறவைப் பராமரிக்க தவெக நினைத்திருந்தாலும், அதற்குத் தன்னால் முடிந்த ஒரு முற்றுப்புள்ளியை திருமாவளவன் வைத்துவிட்டார்.

திருமாவளவன்
திருமாவளவன்

திருமாவிற்கு தவெக மீது ஒரு நம்பிக்கை.!

மற்றொரு கோணத்தில் பார்த்தால், தொடக்க காலத்தில் விஜய்யைப் பற்றி திருமாவளவன் ‘ஆர்.எஸ்.எஸ்-ன் பிள்ளை’ என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த 100 நாட்களில் தவெக தரப்பில் தொகுதி மறுவரையறை, நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம், தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தீர்மானம் என 6 முக்கியத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது அரசியலாக திருமாவிற்கு தவெக மீது ஒரு நம்பிக்கையைத் தந்திருக்கலாம்” என்று பின்னணி அரசியல் கணக்குகளை விவரித்தார் பத்திரிகையாளர் சுவாமிநாதன்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள...

"அந்தத் தண்ணீரைக் குடிக்கிறாங்க, கோயிலுக்கு அபிஷேகம் பண்றாங்க" – கூவம் நதி குறித்து சௌமியா அன்புமணி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை...

"தவெக 10 சீட்டுக்கு மேல் ஜெயித்தால்…" – சவாலில் தோற்றதால் மீசையை மழித்த அதிமுக மாசெ

அ.தி‌.மு.க-வின் நீலகிரி மாவட்ட செயலாளராகத் தற்போது பதவி வகித்து வருகிறார் வழக்கறிஞர்...

`காக்ரோச், இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் `நோ' – தமிழக அரசின் சர்ச்சை உத்தரவும் உடனடி வாபஸும்

மாணவர்கள், காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் பங்கேற்பதைத்...