தமிழக அரசியலில் புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விலகல் மற்றும் ‘குதிரைப் பேரம்’ குற்றச்சாட்டு விவகாரம், தற்போது ஆளுநர் மாளிகையின் கவனத்திற்குச் சென்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் விளக்கம் கேட்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதிமுகவைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்கள் அண்மையில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். இந்த நடவடிக்கை தன்னிச்சையானதல்ல, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரசியல் பேரம் மூலம் நடைபெற்றிருக்கலாம் என திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் தனித்தனியாக ஆளுநரைச் சந்தித்து மனுக்கள் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஆவணங்கள், அறிக்கைகள் மற்றும் சில வீடியோ ஆதாரங்களும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் முக்கிய அம்சமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்திருந்த பழைய பேட்டி ஒன்று தற்போது எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் மதிமுக இணைந்த பின்னர் அளித்த பேட்டியில், மதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களை பதவி விலகுமாறு முதலமைச்சர் விஜய் கேட்டுக் கொண்டதாக வைகோ தெரிவித்திருந்தார். அந்த பேட்டியின் வீடியோ பதிவை எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் ஆதாரமாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விலகல் சம்பவமும் திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்ற வாதத்தை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.
சமீபத்தில் டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்புக்கு பிறகு தமிழக அரசியல் தொடர்பான விவகாரங்களில் ஆளுநரின் செயல்பாடுகளில் மாற்றம் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கவனித்து வருகின்றன.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து கூடுதல் தகவல்களை சேகரிப்பதிலும், அரசிடம் விளக்கங்கள் கோருவதிலும் ஆளுநர் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
அரசியலமைப்புச் சட்டம் 167 என்ன சொல்கிறது?
இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்து சட்ட நிபுணர்களும் விவாதித்து வருகின்றனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 167வது பிரிவின்படி, மாநில நிர்வாகம் தொடர்பான எந்த விவகாரத்தையும் குறித்து ஆளுநர் தகவல் கோரினால், முதலமைச்சர் அல்லது அரசு அதற்கான விளக்கத்தை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா, கட்சி மாறுதல், அரசியல் பேரம் குறித்த குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசிடம் ஆளுநர் விளக்கம் கோருவதற்கு சட்டரீதியான வாய்ப்பு இருப்பதாக சில சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இடைத்தேர்தலுக்கு முன் அரசியல் அழுத்தமா?
ஆறு தொகுதிகள் காலியாகியுள்ள நிலையில், இதுவரை இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக பெரிதாக்கி மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக ஆளுங்கட்சி வட்டாரங்கள் குற்றம்சாட்டுகின்றன.
மறுபுறம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை பதவி விலகச் செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதால், முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அடுத்த கட்டம் என்ன?
எதிர்க்கட்சிகளின் மனுக்கள், சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் சட்ட ஆலோசனைகளை ஆய்வு செய்த பிறகு, தமிழக அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விலகல் விவகாரம் வெறும் அரசியல் குற்றச்சாட்டைத் தாண்டி, ஆளுநர் – அரசு மோதலாக மாறும் வாய்ப்பும் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தமிழக அரசியல் களத்தில் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், வரும் நாட்களில் மேலும் முக்கியத்துவம் பெறக்கூடும் என்பதால் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சட்ட மற்றும் நிர்வாக வட்டாரங்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.!




