அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாக, மயிலம் தொகுதி எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், சி.வி.சண்முகம் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை. இதனிடையே, பேரவை நடவடிக்கைகள் முடிந்த உடனேயே முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சென்னை எம்.ஆர்.சி நகர் அருகே உள்ள சி.வி.சண்முகத்தின் அலுவலகத்திற்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது, கட்சிக்குள் நிலவி வரும் அதிருப்திகள், சமீபத்திய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, எந்தவித அவசர முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என்றும், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்றும் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிகளில் செய்யப்பட்ட மாற்றங்களும், முக்கிய நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் இந்த அதிருப்திக்கு காரணமாக கூறப்படுகின்றன. மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பலருக்கு இதுவரை மாற்று பொறுப்புகள் வழங்கப்படாத நிலையில், அந்த பட்டியலில் சி.வி.சண்முகமும் ஒருவர்.
தனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கும் சி.வி.சண்முகம், சமீபகாலமாக எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் மீது கடும் கோபத்தில் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து அவர் தீவிரமாக பரிசீலித்து கூறப்படுகிறது.
கட்சிக்குள் புதிய சிக்கல் உருவாகக்கூடாது என்பதற்காகவும், இந்த விவகாரம் மேலும் பெரிதாகாமல் தடுக்கவும் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சி.வி.சண்முகம் தனது முடிவை மாற்றுவாரா அல்லது அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வாரா என்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




