ஐதராபாத்தில் மெட்டாவின் இந்திய தலைவர் அருண் ஶ்ரீனிவாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏன்?
சில நாள்களுக்கு முன்பு, டெல்லி ஜந்தர் மந்தரில் வினாத்தாள் கசிவிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் அனைவரும் அறிந்ததே.
இந்தப் போராட்டத்தின் போது, பலரும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இந்திய பிரதமர் மோடியை விமர்சித்து, கேலி, கிண்டல் செய்து வீடியோக்கள் பதிவு செய்திருந்தனர்.
அடுத்து என்ன?
இந்த வழக்குப் பதிவையடுத்து, மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் (META.O) நிறுவனத்திற்கு ஐதராபாத் போலீஸார் நோட்டீஸ் அனுப்ப உள்ளனர்.
ஏன் அருண் ஶ்ரீனிவாஸ் மீது வழக்குப் பதிவு?
இந்த ஆண்டு இந்திய அரசு இணையதள உள்ளடக்க விதிகளை மிகவும் கடுமையாக்கி உள்ளது.
அதன் படி, பயனர்கள் பதிவிடும் கருத்துகளுக்கு, அந்தச் சமூக வலைதளங்களும் பொறுப்பேற்க வேண்டும்.
அதன் அடிப்படையில், பயனர்களின் கருத்துகளுக்கு அந்தத் தளங்களின் உயர் அதிகாரிகளின் பொறுப்புகளும் அதிகரிக்கிறது.
இதனால்தான், அருண் ஶ்ரீனிவாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சர்வதேச நிறுவனத்தின் மூத்த அதிகாரி மீது தனிப்பட்ட முறையில் வழக்குப் பதிவு செய்வது மிக மிக அரிதானது.
பின்னணி – இதுவாக இருக்குமோ?
சமீபத்தில் மோடி பதிவிட்ட வீடியோ ஒன்றை ஃபேஸ்புக் தற்காலிகமாக நீக்கியது. இதற்கு இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டா அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது.
ஆனால், ‘அது தற்செயலாக நடந்த முடக்கம்’ என்று மெட்டா நிறுவனம் விளக்கியது.
ஒருவேளை, இந்தச் சம்பவத்தினால்கூட, மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கலாமோ என்றுகூட சந்தேகிக்கப்படுகிறது.




