மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து இருக்கிறது. ஆனால் இத்தேர்தலில் வெறும் 80 தொகுதியில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்துள்ள மம்தா பானர்ஜி, பா.ஜ.கவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பா.ஜ.கவும், தேர்தல் கமிஷனும் சேர்ந்து சதி செய்து தங்களது கட்சியை தோற்கடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து வருகிறார். ஆனால் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பா.ஜ.க மக்கள் தீர்ப்பை மம்தா பானர்ஜி மதிக்க மறுப்பதாக தெரிவித்துள்ளது. மம்தா பானர்ஜியின் இச்செயலால் மேற்கு வங்கத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பதால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்டு வருகின்றனர். ஆங்காங்கே வன்முறை நடந்து வருகிறது.
இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கலவரத்தில் ஈடுபடுபவர்களை உடனே கைது செய்யும் படி மாநில நிர்வாகத்திற்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உத்தரவிட்டு இருக்கிறார். இதற்கிடையே வரும் 9ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது.
ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளான வரும் 9ம் தேதி மத்திய கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் அணிவகுப்பு மைதானத்தில் இந்த பதவியேற்பு விழா நடக்க இருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மைதானத்தில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ஷேக் முஜிபுர் ரஹ்மான் போன்ற தலைவர்கள் உரையாற்றி இருக்கின்றனர். மற்றொருபுறம் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது. புதிய முதல்வர் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து ஆலோசிப்பதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை மேற்கு வங்கத்திற்கு வர இருக்கிறார்.




