ஏற்கெனவே பிப்ரவரி மாதம் முதல் ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கான எண்ட் கார்டு இன்னும் தெரியாத நிலையில், மத்திய கிழக்கில் இன்னொரு பிரச்னை தற்போது வெடித்துள்ளது. இது சவூதி அரேபியா vs ஹூதி தாக்குதல் ஆகும்.
இதைப் பழைய ‘புதிய’ பிரச்னை எனக் கூறலாம். குழப்பமாக உள்ளதா… கடந்த 2022-ம் ஆண்டிலிருந்து அவ்வப்போது இரு தரப்பிற்கும் நடந்து வருகிறதுதான். கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு, தற்போது இந்தத் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
ஹூதி, சவூதி…
ஹூதி அமைப்பு ஏமனைச் சேர்ந்த அமைப்பாகும். சவூதி, ஏமன் இரண்டும் பக்கத்து நாடுகள். ஹூதி ஏமனில் பயங்கரவாதக் குழுவாகக் கருதப்படுகிறது. இந்த அமைப்பு ஏமனில் பரந்து விரிந்திருப்பதைச் சவூதி தங்களுக்கான அச்சுறுத்தலாகப் பார்க்கிறது.
ஏமன் அரசை முழுமையாக வசப்படுத்த ஹூதிக்குத் தடையாகச் சவூதி உள்ளது. இதனால், ஹூதிக்குச் சவூதியைப் பிடிக்கவில்லை.
இரு தரப்பிற்கும் 2022-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சமாதான உடன்படிக்கையைச் செய்தது. ஆனால், அது அவ்வளவு வலுவானதாக இல்லை. இதனால், இரு தரப்பிற்கும் மோதல் நடந்துகொண்டே இருக்கிறது.
ஈரான் ஆதரவு
சவூதி அரேபியாவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு இருந்தாலும், ஹூதியை ஈரான் ஆதரிக்கிறது. நிதி முதல் ஆயுதம் வரை ஹூதிக்கு ஈரான் வெகுவாக உதவுகிறது.
இதை அடிப்படையாகக் கொண்டுதான், தற்போது ஹூதி சவூதியைத் தாக்கியுள்ளது.
சவூதி கொடுத்துள்ள தரவுகளின்படி, ஏமனின் (ஹூதி) தாக்குதலில் 73 பேர் காயமடைந்துள்ளனர்.

எண்ணெய் விலை?!
தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாவிற்கு 90 டாலர்களைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது.
இந்த நிலையில், மத்திய கிழக்கில் இன்னொரு புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது எண்ணெய் விலையையும், எண்ணெய் போக்குவரத்தையும் மீண்டும் கேள்விக்குறியாக்குமோ என்கிற கேள்வி உலக நாடுகளிடம் எழுந்துள்ளது.




