திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதிகளான ஜமுனாமரத்தூர், மேல்மட்டு, நாடனூர் உள்ளிட்ட கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வாழும் மலைவாழ் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே சார்ந்திருக்கின்றனர். இந்த நிலையில், அவர்களின் பயன்பாட்டில் இருக்கும் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களுக்கு `பயன்பாட்டு உரிமை மாற்றுப் பட்டா’ வாங்கித் தருவதாகக் கூறி வனத்துறையினரே `தலைக்கு ரூ.5 லட்சம்’ என வசூல் வேட்டையில் இறங்கியதாகக் கூறப்படுகிறது. இப்படியே, சுற்றுவட்டார மலைக் கிராமங்களிலிருந்து லஞ்சப் பணமாக சுமார் ரூ.1 கோடி வரை வசூலித்து வாரிக் குவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பட்டா வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மலைவாழ் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வனத்துறை அலுவலர்களிடம் கேட்கும்போதெல்லாம் அவர்களின் மிரட்டல்களுக்கும் ஆளாகியிருக்கின்றனர். இதுதொடர்பான புகார் உயர்மட்ட அதிகாரிகளுக்குச் சென்றிருக்கிறது. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதால், திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் சுதாகர் துறைரீதியாக விசாரணை மேற்கொண்டு, முதற்கட்ட நடவடிக்கையாக குற்றச்சாட்டுக்குள்ளான வனச்சரக அலுவலர்கள் பிரபு, சுரேஷ், செங்குட்டுவன், வனக்காவலர் முத்து, வனவர்கள் அருணகிரி, சுப்பிரமணி ஆகிய 6 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருவதால், வனத்துறை வட்டாரத்தில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.




