உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதிகள் நியமனம் முறையாக நடபெறவில்லை என ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு, அரிபந்தாமன் ஆகியோர் வெளிப்படையாக குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நீதிபதி சந்துரு, “அரசமைப்புச் சட்டப்படி உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் நடப்பதில்லை. முன்பு நீதிபதிகள் நியமனத்துக்கு உறுப்பினர்கள் கொண்ட நிரந்தர அமைப்பு இருந்தது. நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி பின்பற்றப்படுவதில்லை. உச்ச நீதிமன்ற நீதிமன்றத்தில் 34 சதவிகிதம் பிராமண சமுதாயமாகத்தான் இருக்கின்றனர். இதுபோன்ற நடைமுறையைப் பார்க்கும்போது என்னைப் போன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதிகளுக்கு கவலையளிக்கிறது.
இந்திய மக்கள் தொகையில் இருக்கும் வெறும் 10 சதவிகித மக்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமையும், SC, ST, OBC , சிறுபான்மையினர், பெண்களுக்கும் உரிய முன்னுரிமை அளிக்கபடாமல் புறக்கணிப்பதும் தொடர்கிறது. 79 சதவிகித நீதிபதிகள் நியமனம் உயர்சாதியினருக்கே வழங்கப்படுகிறது என்பதைக் கவனிக்கும்போது உச்ச நீதிமன்ற, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் வழிகாட்டுதலின்படி நியமனம் நடப்பதில்லை என்பது தெளிவாகிறது. ஒரு சில குழுக்களிலிருந்து நியமிக்கப்படாமல் நாடு முழுவதும் பரவலாக நியமனங்கள் நடைபெறவேண்டும்.
பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நீதிபதிகள் நியமனத்தில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். கேரளத்தில் 74 சதவீதம் அளவுக்கு கீழமை நீதிமன்றங்களில் பெண்கள்தான் இருந்தனர். ஆனால் அவர்களில் ஒருவர் கூட உச்ச நீதிமன்றத்துக்கு வரவில்லை” என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி அரிபந்தாமன், “நீதிபதிகள் நியமனம் முறையாக நடப்பதில்லை என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். இன்னும் குறிப்பாக, வெளிப்படையாகக் கூறுவதென்றால், ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ள, அந்த சித்தாந்தத்தை ஆதரிப்பவர்கள்தான் நீதிபதிகளாக வரமுடியும் என்ற சூழல் உருவாகிவிட்டது கவலைக்குறியது” என்றார்.