சேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம், கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், கலந்துக்கொண்ட பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தாக்குதல் கண்டித்து போராட்டம் குறித்த கேள்விக்கு, “மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படை கைது செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் நமது எல்லைகளுக்கு உட்பட்டு தான் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். எல்லைப் பகுதி சரியான முறையில் தெரியாது, எல்லைக்கோடும் கிடையாது. மீனவர்கள் ஒரு சிலர் இலங்கை எல்லைக்குள் செல்கிறார்கள் என்றால், அதை கண்டித்து அனுப்ப வேண்டும்.
`திமுகவிடம் தான் கேட்க வேண்டும்’
மீனவர்களுக்கு எல்லையின் அளவு தெரியாது, இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கமும் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை அரசு தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாடாளுமன்றத்தில் அதிமுகவில் ஆட்கள் கிடையாது, இது குறித்து திமுகவிடம் தான் கேட்க வேண்டும். அதிமுக ஆட்சியில் மீனவர்கள் தொடர்ந்து காப்பாற்றப்பட்டனர். கச்சத்தீவை யார் கொடுத்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும். அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும். இதை முற்றுப்புள்ளி வைக்கும் படி விவாதம் வைத்து மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுத்து கருத்துக்கள் வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் சென்னை உட்பட 38 மாவட்டங்களில் பணியை மேற்கொள்வதற்கு பேரம் பேசுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. திமுகவின் தாரக மந்திரமே கமிஷன், கலெக்ஷன் தான் எல்லாம் மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. தர்மபுரியில் திமுக மாவட்ட செயலாளர் பேசிய பேச்சுகள் எல்லாம் வெளியாகி உள்ளது. அதில், மாவட்ட ஆட்சியரை மிரட்டுகிறார், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை மிரட்டுகிறார். சாதாரண அலுவலர்கள் எல்லாம் எங்கு போய் நிற்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக ஆட்சியில் மோசமான நிலையில் எல்லாம் நிகழ்ந்து வருகிறது” என்றாட்.
`பாஜக-வுடன் கூட்டணியா?’
அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கு, “திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக தயாராக இருக்கிறது. திமுக மட்டும் தான் எங்களுக்கு எதிரி. மற்ற கட்சிகள் எதுவும் எதிரி இல்லை.

திமுகவில் வீழ்த்த வேண்டும் அதுதான் எங்கள் குறிக்கோள். அதிமுக கூட்டணி குறித்து தேர்தலுக்கு முன்பாக ஆறு மாதங்கள் இருக்கும்போது சொல்லப்படும்.” என்றார்.
தொடர்ந்து, “திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்? திமுக கவர்ச்சி பேசக்கூடிய கட்சி.. பேச்சு மட்டும் தான் உள்ளது. செயலில் பூஜ்ஜியம்.. திமுக வார்த்தை ஜாலங்களில் வல்லவர்கள்.. அப்பா அப்பா என்று சொன்னால் குடும்பத்தில் பிரச்னை வந்துவிடும், முதல்வராக அதை அவரே உணர வேண்டும்.” என்றார்.
தேமுதிக-வுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படுமா என்று கேட்டதற்கு, `தேமுதிக-வுக்கு ராஜ்யசபா சீட் குறித்து நாங்கள் எதுவும் அறிவிப்பு வெளியிடவில்லை’ என்றார்.
“திமுகவிற்கு பயம் சோதனை வந்துவிடும் என்ற பயத்தில் இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தால் நிதி வந்து விடுமா? நாடாளுமன்றத்தில் பேசினால் தான் தீர்வு கிடைக்கும்” என்றார்.