பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது வரவேற்கத்தக்கது. ஆனால், கரூர் சம்பவம் நடந்தபோதே அவர் அங்கிருந்தே ஒரு ஆறுதல் கூறியிருந்தால் இதைவிட இன்னும் நன்றாக, பெரிய மரியாதையாக இருந்திருக்கும். இன்று அவர் முதலமைச்சராக வந்துவிட்டதால் கருணை அடிப்படையில் ஆணை கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அ.தி.மு.க-வைச் சேர்ந்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கும் இந்தச் சூழலில், இப்போது அங்கு போய் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது முழுக்க முழுக்க அரசியல் காரணம்தான்.
தேர்தல் முடிந்து 50 நாள்களுக்குள் அம்பாசமுத்திரத்திலோ, கரூரிலோ, விராலிமலையிலோ சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இன்றைய அரசு சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்துகிறது. விஜய் தலைமையிலான தவெக கூட்டணிக்குள்ளேயே ஒரு பெரிய பிரச்னை இருப்பது தெரிகிறது.
முன்பு ‘இந்தியா’ கூட்டணி என்று ஒன்று இருந்தது, இப்போது அது இல்லை. வரும் 2029-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவார்கள்.
திருமாவளவன் “நாங்கள் திமுக-வோடு நட்புறவோடு இருக்கிறோம்” என்று கூறுவது பாலுக்கும் காவல், பூனைக்கும் காவல் என்பது போல இருக்கிறது. இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
காங்கிரஸ் கட்சி காலம் காலமாக காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை என அனைத்திலும் தமிழகத்திற்கு துரோகம் செய்த கட்சி. கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்து மீனவர்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ். கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சி மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று சொல்கிறது. இங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் அங்குள்ள முதலமைச்சருக்கு போனில் பேசினாலே போதும். ஆனால், மாணிக்கம் தாகூர், பிரதமர் இதில் தலையிட்டு தடுக்க வேண்டும் என்கிறார்.” என்றார்.




