நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அவர் பேசியுள்ளதாவது…
“மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறப்போகிறது. திமுக அரசின் மகளிர் மற்றும் மாணவர்களுக்கான திட்டங்கள், கூட்டணியின் கொள்கைப் பிடிப்பு, மற்றும் வன்முறை அரசியலுக்கு இடம் கொடுக்காத தன்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.
வட இந்தியாவைப் போல தமிழகத்தில் வெறுப்பு அரசியல் தலைதூக்க மக்கள் விடமாட்டார்கள் என்பதை அவர்கள் உணர்த்தியுள்ளன
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தக் கூட்டணியைச் சிதைக்கப் பல சூழ்ச்சிகள் நடந்தன; குறிப்பாக திருமாவளவனை வெளியேற்றி கூட்டணியை பலவீனப்படுத்தத் திட்டமிட்டார்கள். ஆனால் நாம் நிதானமாகச் செயல்பட்டு அந்த முயற்சிகளை முறியடித்தோம்.
சிலர் நாம் திமுகவுக்குத் துணை நிற்கிறோம் என்று கொச்சைப்படுத்தினார்கள். கூடுதல் இடங்களைப் பெறத் திருமாவளவன் முயலவில்லை என்றும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக அரசு இருப்பதாகவும் விமர்சித்தார்கள்.
தற்காலிக ஆதாயத்திற்காக முடிவெடுத்துவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வோடு நாம் செயல்பட்டோம். நாம் சராசரி அரசியல்வாதிகளைப் போலச் செயல்பட்டிருந்தால் தமிழக அரசியல் தலைகீழாக மாறி இருக்கும்.
தொகுதிப் பங்கீட்டின்போது இரட்டை இலக்க இடங்களைக் கோரினாலும், கூட்டணியின் நலன் கருதி நான் ஒரு முடிவெடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். இது ஏமாளித்தனம் அல்ல, நம்முடைய தொலைநோக்கு பார்வை மற்றும் கொள்கைப் பிடிப்பு ஆகும்.
தற்போது வந்துள்ள கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றே கூறுகின்றன. ஆர்எஸ்எஸ் அல்லது பாஜக ஆதரவு நிறுவனங்களின் கணிப்புகளை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகளை அதிமுக, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் மற்றும் சீமான் தலைமையிலான கட்சி ஆகியவை பிரித்துக் கொள்கின்றன. இருப்பினும், தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வலிமை பெறவில்லை”.




