அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ முதல்வர் விஜய் ஒவ்வொரு துறையையும் ஆய்வு செய்வது, மெட்ரோ ரயில் பயணம், புழல் சிறைக்குச் சென்று அங்கே பார்வையிடுவது போன்ற பல்வேறு பணிகளை வரலாற்றில் இல்லாத அளவிற்கு சென்று நேரடியாக பார்த்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவருடைய உள்ளத்திலே இருப்பது ஒன்றே ஒன்றுதான். தமிழ்நாட்டு மக்களுக்குச் சிறந்த ஆட்சியை தந்து தமிழகம் மேலும் இந்தியாவிற்கே வழிகாட்டியாக உருவாக வேண்டும் என்பதுதான். நேபாளத்தில் நடந்தவை உலகத்தையே உலுக்கியிருக்கிறது. முதல்வர் இது தொடர்பான தகவல்களை கவனித்துக்கொண்டே இருக்கிறார்.
டெல்லிக்கு நான்கு அமைச்சரை அனுப்பி, இந்திய அரசோடு இணைந்து என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து மீட்புப் பணிகளுக்கு உதவி வருகிறார். முதல்வர் என்னிடம் அமர்ந்து என்ன பேசினார் என்பதை வெளியே சொல்வது முறையாக இருக்காது. இடம் மாறி உட்கார்ந்த அவர், எல்லோரையும் உற்சாகப்படுத்த விரும்புகிறார்.
சட்டமன்ற விவாதம் குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு நான் பதில் சொன்னால், அது விவாதமாகிவிடும். அது தேவையற்ற ஒன்று. சி ஓட்டர்ஸ் நடத்திய கருத்து கணிப்பில் அடுத்தப் பிரதமர் என்ற பட்டியலில், மோடி முதல் இடத்தையும், விஜய் மூன்றாம் இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். ஆனால், புதிதாக உருவான ஒரு கட்சியின் தலைவர், இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிப்பதெல்லாம் எந்த வரலாற்றிலும் இல்லை. எனவே, எதுவும் நடக்கலாம். இந்தியா முழுவதும் விஜய் போய் சேருவதற்கு காரணம் அவரின் திட்டங்கள்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.” என்றார்.




