கோவை கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக விக்னேஷ் பதவி வகித்து வருகிறார். வாக்கு எண்ணிக்கை இறுதியில் 99 ஆயிரத்து 950 வாக்குகள் பெற்ற விக்னேஷ், 11 ஆயிரத்து 710 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் கோவையில் த.வெ.க. தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக அத்தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.வி.கே. கந்தசாமியின் பேரன் சபரி கார்த்திகேயன் மற்றும் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் ஆகியோரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
அ.தி.மு.க. பலம் வாய்ந்த இந்த தொகுதியில் அக்கட்சியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, புதுமுகமான விக்னேஷ் சட்டமன்றத்திற்கு தேர்வானார்.
கோவை சுந்தராபுரம் அருகேயுள்ள மச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (38). பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், சிசிடிவி கேமரா விற்பனை கடை நடத்தி வருகிறார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் மக்கள் மன்றத்தில் பணியாற்றி வந்த இவர், த.வெ.க-வில் கோவை தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட த.வெ.க. அமைச்சரவையில், முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள விக்னேஷ்க்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சராக பதவியேற்ற விக்னேஷ்க்கு விரைவில் துறைகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல மாநகர மாவட்டச் செயலாளர் சம்பத்குமாருக்கும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதால், கோவை மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ரசிகர் மன்றத்தில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




