19
July, 2026

A News 365Times Venture

19
Sunday
July, 2026

A News 365Times Venture

ஏவுகணையும் தேர்தல் உதவியும்! இந்தோனேசியாவுடன் உறவை வலுப்படுத்தும் இந்தியா – மோடி பயணத்தின் பின்னணி?

Date:

தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய சக்தியாக விளங்கும் இந்தோனேசியாவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள பயணம், இருதரப்பு உறவில் புதிய அத்தியாயத்தை எழுதும் என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

வெறும் சம்பிரதாய சந்திப்புகளாக இல்லாமல், ராணுவம், பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு எனப் பல முனைகளில் இரு நாடுகளையும் பிணைக்கும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் விமானம் இந்தோனேசிய வான்பரப்பிற்குள் நுழைந்தபோது, அந்நாட்டுப் போர் விமானங்கள் புடைசூழப் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டதும், ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவே நேரில் விமான நிலையம் வந்து வரவேற்றதும், இந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகின்றன.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு, வெறும் சம்பிரதாய நிகழ்வாக மட்டும் பார்க்கப்படவில்லை. 2018-ல் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு ‘விரிவான வியூகக் கூட்டாண்மை’ (Comprehensive Strategic Partnership) நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு நடைபெறும் முதல் இருதரப்புப் பயணம் இதுவாகும்.

எனவே, இந்தக் கூட்டாண்மையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் திட்டங்கள் என்னென்ன?

பாதுகாப்பு ஒத்துழைப்பே இந்தப் பயணத்தின் மையப்புள்ளியாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான ‘ஆஸ்த்ரா’ வான்வழித் தாக்குதல் ஏவுகணைகளை இறக்குமதி செய்ய இந்தோனேசியா முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, ஆஸ்த்ரா ஏவுகணைகளின் செயல்திறனை இந்தியா வெற்றிகரமாக நிரூபித்ததே இந்தோனேசியாவின் இந்த ஆர்வத்திற்குக் காரணம்.

ஏற்கனவே இந்தியாவிடமிருந்து பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை வாங்கியுள்ள இந்தோனேசியா, தற்போது அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விரும்புகிறது. இதற்காகக் கூடுதல் பிரமோஸ் ஏவுகணை பேட்டரிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ச்சியான கூட்டு ராணுவப் பயிற்சிகள் மற்றும் பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு உறவு கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமாக வளர்ந்துள்ளது.

ஏவுகணைகள் மட்டுமல்ல… பொருளாதாரப் பாதுகாப்புக்கும் இந்தப் பயணம் வழிவகுக்கிறது. எஃகு, நிக்கல் மற்றும் அரிய வகை உலோகங்கள் போன்ற முக்கிய கனிமங்களின் உற்பத்தியில், இந்தோனேசியாவில் இந்தியா முதலீடு செய்ய உள்ளது. இது, சீனாவின் பிடியில் இருக்கும் முக்கிய கனிம விநியோகச் சங்கிலிக்கு ஒரு மாற்றை உருவாக்கும் இந்தியாவின் நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

இதைத் தாண்டி, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வியூக நகர்வாக, மலாக்கா ஜலசந்தியை ஒட்டியுள்ள சபாங் துறைமுகத்தை இந்தியாவும் இந்தோனேசியாவும் இணைந்து மேம்படுத்த உள்ளன. இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு மிக அருகில், சுமார் 100 மைல் தொலைவில் இந்தத் துறைமுகம் அமைந்திருப்பது இதன் ராணுவ முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது.

இந்தப் பயணத்தின் ஆச்சரியமூட்டும் அம்சம், தேர்தல் தொழில்நுட்பப் பரிமாற்றம். இந்தோனேசியாவின் தேர்தல் முறைக்கு ஏற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVMs) உருவாக்க இந்தியா தொழில்நுட்ப உதவி வழங்க உள்ளது. இது இந்தியாவின் தேர்தல் மேலாண்மை முறைக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகவும், இரு ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான நிறுவன ஒத்துழைப்பின் வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது.

“இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழ்ந்த நம்பிக்கை, பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் நீடித்த நட்புறவை வலுப்படுத்தும் அதே வேளையில், முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை இந்தப் பயணம் திறந்துள்ளது,” என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 6 முதல் 8 வரை நடைபெறும் இந்தப் பயணம், தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒரு வலுவான கூட்டாளியை உறுதி செய்வதற்கும் இந்தியா எடுக்கும் மிக முக்கியமான முயற்சி.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"தினசரி 1 லட்சம் பேர் சாப்பிடுறாங்க" – முதல்வரின் உத்தரவால் வளர்ச்சியடைந்ததா அம்மா உணவகங்கள்?

தவெக அரசு அமைந்த பிறகு அம்மா உணவகங்களை மேம்படுத்த முதல்வர் விஜய்...

மழைக்காலக் கூட்டத் தொடர்: `திமுக-வின் விரிசல்; திரிணாமுல் பிளவு'- பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக?

காத்திருப்பில் 2 மசோதாக்கள்நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி...

“தவெக எம்எல்ஏ-க்கள் திமுக-வுக்கு வருவாங்க; 6 மாசத்துல ஆட்சி மாற்றம் நடக்கும்" – அனிதா ராதாகிருஷ்ணன்

தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில்...