கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை தூய்மையான ஆட்சியை, மக்கள் வியக்கத்தக்க ஆட்சியை இளைஞர்கள், மகளிர், 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் என அனைவரும் மாற்றம் வேண்டும் என்ன விரும்பினர்.
இதனால் சிறந்த ஆட்சியை இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நீக்கி, பணமே இல்லாமல் தேர்தலைச் சந்தித்த வரலாறை இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கி காட்டி இருப்பவர் முதல்வர் விஜய்
தொலைநோக்கு சிந்தனையுடன், தமிழகம் இந்தியாவிற்கு ஒரு சிறந்த திருப்புமுனையை உருவாக்கும் மாநிலமாக, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை உருவாக்கும் மாநிலமாக இருக்கும்.
அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் திட்டங்களாக இருக்கின்றன. 200 யூனிட் மின்சாரம், பெண்கள் பாதுகாப்பிற்கான திட்டம், சிறிய குழந்தைகள் போதையில் அடிமையாகி விடக்கூடாது என்பதற்காகப் பாதுகாக்கும் திட்டம், ஆலயங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் அருகில் இருக்கும் மதுக்கடைகள் அகற்றுதல் போன்ற பல்வேறு திட்டங்கள் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் திட்டங்களாக இருக்கின்றன.
நல்லாட்சியைத் தருவதற்கு சிறந்த ஆட்சியைக் கொடுப்பதற்கு, இனி எதிர்காலத்தில் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்ற வரலாற்றைப் படைப்பதற்கு விஜய் ஒருவரால் தான் முடியும். வேறு எவராலும் முடியாது” என்றார்.
அ.தி.மு.க இரு அணிகளாகப் பிரிந்து இருப்பது குறித்த கேள்விக்கு, “பொதுவாக மக்களை நேசிக்கின்றவர்கள், தலைவரை நேசிக்கின்றவர்கள், தலைவர் மீதும், மக்கள் மீதும் அக்கறை இல்லாதவர்களுக்குத்தான் இந்தச் சரிவு ஏற்பட்டு இருக்கிறது.
அத்திக்கடவு அவிநாசி திட்டம் வரும்போது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படம் தேவையில்லை, என் படம் போதும் எனப் பாராட்டு விழா வைத்தவர் (எடப்பாடி பழனிச்சாமி). இன்று அவர் எங்கு இருக்கின்றார் என்று தெரியவில்லை. இன்றைக்கும் ஜெயலலிதா படம் என் பாக்கெட்டில் இருக்கிறது. என் படம் மட்டும் போதும் என நினைத்தவரின் கனவு தூள் தூள்தூளாக்கப்பட்டுள்ளது.
அவருடைய ஆத்மா இன்று தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை நாடு பார்த்துகொண்டு இருக்கிறது” எனப் பதிலளித்தார்.




