விழுப்புரம் மாவட்டம், தோகைபாடியை சேர்ந்தவர் பிரகாஷ். மிகுந்த உடல் நலக்குறைகளுடன் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 10 நாள்களாகத் தீவிர சிகிச்சை பெற்று உடல்நலத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. பின் பிரகாஷை பரிசோதனை செய்த மருத்துவர், ஓரிரு நாள்கள் தான் உயிரோடு இருப்பார் எனக் கூறினாராம். இதையடுத்து உறவினர்கள் பிரகாஷை ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். இதனால் பிரகாஷின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கையெழுத்திட்டு பிரகாஷை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்தனர்.
ஆம்புலன்சில் வந்த பிரகாஷின் முகத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் மாஸ்க் எடுக்கப்பட்டிருந்த நிலையில், உறவினர் ஒருவர், பிரகாஷ் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்ததால், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தவறான தகவலைக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பிரகாஷின் உறவினர்கள் பந்தல் போட்டு, உடலை வைப்பதற்கு ஃப்ரீசர் பாக்ஸ், அடக்கம் செய்வதற்கான சடங்கு பொருள்கள், மாலைகள் என அனைத்தையும் தயார் செய்தது மட்டுமன்றி, இடுகாட்டில் உடலைப் புதைப்பதற்கும் குழியினைத் தோண்டி தயாராக வைத்துள்ளனர். பின் ஆம்புலன்ஸில் இருந்து உறவினர்கள் உடலை இறக்கி ஃப்ரீசர் பாக்ஸில் உடலை வைப்பதற்கு முற்பட்டபோது பிரகாஷ், கண்விழித்து கை, கால்களை அசைத்ததால் அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் அலறி அடித்து ஓடினர்.
பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாகக் கானை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரகாஷின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தினை குறை கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உறவினர் ஒருவர் அளித்த தவறான தகவலின் பேரில் அரங்கேறிய இத்தகைய சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர், “நாங்கள் நோயாளி இறந்ததாகக் கூறவில்லை. இறப்பு சான்றிதழும் வழங்கவில்லை. அவரது உடல் நலம் மிக மோசமாக இருந்ததால், உயிரைக் காப்பாற்றுவது சற்று கடினம் என்று மட்டும்தான் கூறினோம். பிரகாஷின் உறவினர்கள் தான் அவரை நாங்கள் வீட்டில் வைத்தே பார்த்துக் கொள்கிறோம் எனக் கையெழுத்திட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறும்போது நலமுடன்தான் இருந்தார். அவரது உறவினர் அளித்த தவறான தகவலால்தான் இந்தச் சம்பவம் அரங்கேறியது. இதற்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. நாங்கள் அனைத்து ஆதாரங்களையும் உடன் வைத்திருக்கிறோம்” எனக் கூறினார்கள்.