இந்திய ரயில்வே நிர்வாகம் தனது ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கையில் 2 சதவீதத்தைக் குறைக்க அதிரடி உத்தரவிட்டிருக்கிறது.
இந்திய ரயில்வேயில் மொத்தமுள்ள 14,80,455 பணியாளர்களில், சுமார் 29,608 பணியாளர்களைக் குறைக்க இந்திய நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.
குறிப்பாக, தெற்கு ரயில்வேயில் மட்டும் வரும் 2026 ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி, 1,906 பணியிடங்கள் குறைக்கப்படவுள்ளன.
ஒருபுறம் அதிவேக ரயில்கள், புதிய வழித்தடங்கள் மற்றும் வந்தே பாரத் போன்ற நவீன ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் பணியாளர்களின் எண்ணிக்கையைச் சுருக்குவது முரணாக இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையானது நிர்வாகச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாகக் கருதப்பட்டாலும், இது ரயில்வே துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சங்கத்தினர் கடும் கவலை தெரிவித்துள்ளனர்.

போதிய பணியாளர்கள் இல்லாத சூழலில், தற்போதுள்ள ஊழியர்களுக்குப் பணிச்சுமை அதிகரிப்பதோடு, ரயில்களின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளில் தொய்வு ஏற்படக்கூடும் என்றும், இது பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் என்றும் அவர்கள் எச்சரித்திருக்கின்றனர்.




