தமிழ்நாட்டின் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக காங்கிரஸின் பிரவீன் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக பதிலளிக்க செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தேர்தலுக்கு முன்பு இருந்த கூட்டணியில் ஒரு எம்.பி சீட் கொடுத்தார்கள், தேர்தலுக்குப் பிறகு இருக்கும் கூட்டணியில் ஒரு எம்.பி சீட் கொடுக்கிறார்கள். தி.மு.க-வுடன் 2004-லிருந்து கூட்டணியில் இருந்தோம். 2014 தேர்தலை தவிர அனைத்து தேர்தலிலும் ஒன்றாக இருந்தோம்.
ஆனால் 2026 தேர்தலில் மக்கள் பெரும்பான்மை கிடைக்காத வகையில் வாக்களித்திருக்கிறார்கள். எனவே, நாங்களே தி.மு.க கூட்டணியில் இருந்தாலும் திமுக-வால் ஆட்சி அமைக்க முடியாது. அதே நேரம் இன்னொரு தேர்தல் வரக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தோம். அதற்காகதான் த.வெ.க-வுடன் கூட்டணி அமைத்தோம்.
அரசியலில் இது ஒரு இயல்பான நிகழ்வுதான். அதன் அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலையான அரசை ஏற்படுத்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கிறோம். காங்கிரஸ் கூட்டணி மாறியதால் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு மறுக்கப்படவில்லை. அப்படி நடந்திருந்தால் காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டு சரியாக இருந்திருக்கலாம்.
முதலீடுகளை ஈர்க்க தொழிற்துறை அமைச்சர் இன்ஸ்டாகிராம் மூலம் தொழில் முதலீட்டை ஈர்க்க ரீல்ஸ் போட்டதில் என்ன தவறு. செங்கோட்டையனை தவிர அமைச்சர்களில் யாருக்கும் முன் அனுபவம் கிடையாது. 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் முதல்முறை சட்டமன்றத்துக்கு வந்திருக்கிறார்கள். எனவே, இந்த அரசின் செயல்பாட்டை இப்போதே விமர்சிப்பது கூடாது.

அதேப்போல இப்போது எல்லா யுக்திகளையும் பயன்படுத்த வேண்டும். அதில் தவறில்லை. உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கே தன் வியாபாரம் குறித்து எக்ஸ் பக்கத்தில்தான் அறிவிக்கிறார்.
மேயர் பிரியா – எம்.எல்.ஏ பல்லவி இடையே நடந்ததெல்லாம் ஒரு பிரச்னையா? யார் குத்துவிளக்கு ஏற்றுவது போன்ற சம்பிரதாயத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. மக்களுக்கான பிரச்னை குறித்து இருவரும் விவாதித்துக்கொண்டார்கள் என்றால் நான் மகிழ்ச்சியடைவேன். அதைவிடுத்து, இருவருக்கும் நடந்த விவகாரத்தை பெரிதுபடுத்தாதீர்கள்.” எனத் தெரிவித்திருக்கிறார்.




