9
July, 2026

A News 365Times Venture

9
Thursday
July, 2026

A News 365Times Venture

`ஸ்டாலின் படத்தை குப்பையில் வீசிய தி.மு.க புள்ளி!' டு `தனுஷ் புது கட்சி?' | கழுகார் அப்டேட்ஸ்

Date:

அ.தி.மு.க-விலிருந்து விலகிய பலரும், த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்கள் முன்னிலையில், கட்சியில் இணைந்து வருகின்றனர். ஆனால், ‘நான் இணைந்தால் முதல்வர் முன்னிலையில்தான் கட்சியில் இணைவேன்’ என்று பிடிவாதமாக இருந்த முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், சொன்னபடியே செய்துவிட்டார்.

அதாவது, சமீபத்தில் த.வெ.க-வில் இணைந்த மாற்றுக் கட்சியினருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு கடந்த வாரம் நேரம் கொடுத்திருந்தார் முதல்வர் விஜய். அதைத் தெரிந்துக்கொண்டு, அந்தச் சமயத்தில் முதல்வரைச் சந்தித்து த.வெ.க-வில் இணைந்திருக்கிறார் வைகைச் செல்வன். விஜயின் நெருங்கிய நண்பர் ஒருவர் மூலமாகவே த.வெ.க-வில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கச்சிதமாக காரியத்தை சாதித்துக்கொண்டாராம் வைகைச் செல்வன்.

முதல்வர் விஜய் போட்டோவை உள்ளாட்சி அலுவலகங்களில் வைப்பதில் கடும் அக்கப்போர் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது அல்லவா… அந்த வகையில், சென்னை அருகே முருகக்கடவுள் கோவில் அமைந்துள்ள நகராட்சி ஒன்றில், முதல்வர் விஜய்யின் போட்டோவை வைக்க நகராட்சித் தலைவியின் கணவரே நடவடிக்கை எடுத்துவிட்டாராம். தி.மு.க-வைச் சேர்ந்தவரான அவர், சொந்தக் கட்சி கவுன்சிலர்களின் எதிர்ப்பையும் மீறி, முதல்வரின் ஃபோட்டோவை நகராட்சி அலுவலகத்தில் வைத்தாராம்.

அப்போது, அங்கு ஏற்கெனவே மாட்டப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் படத்தை அவரே அகற்றி, குப்பை தொட்டியில் வீசி விட்டாராம். ‘கட்சி மாறணும்னு முடிவு பண்ணிட்டாரு. அதுக்காக, பனையூருக்கு தன் விசுவாசத்தைக் காட்ட இப்படியா நடந்துக்கொள்வது… த.வெ.க-காரங்களே அமைதியா இருக்கும்போது, நகராட்சி தலைவியின் கணவர் ரொம்பவும்தான் ஆடுறாரு…’ என்று கொதிக்கிறார்கள் தி.மு.க உடன்பிறப்புகள். இவ்விவகாரம்அண்ணா அறிவாலயத்துக்கும் புகாராகச் சென்றிருக்கிறதாம்.

த.வெ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போது, தி.மு.க-வுக்கு ஆதரவாக செயல்பட 35 கோடி தருவதாகச் சொன்னார்கள் என்று புகாரளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா. இந்நிலையில், புகார் எழுப்பிய இளையராஜாவை டேமேஜ் செய்யும் வகையில், அவருக்கு எதிரான விஷயங்களை திரட்ட கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க-வினருக்கு அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாம்.

ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா
ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா

ஊத்தங்கரைக்கு முதன் முதலில் த.வெ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் இளைஞரணி அமைப்பாளரான குமரவேல். ஆனால், அ.தி.மு.க-வில் சீட் கிடைக்காத இளையராஜா, கடைசி நேரத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் முரளிதரன் மூலமாக த.வெ.க தலைமைக்கழக முக்கிய புள்ளியை சந்தித்து வேட்பாளராகிவிட்டார். இதனால் குமரவேல் அதிர்ச்சி ஆனார். அந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கும் தி.மு.க-வினர், ‘வாய்ப்பை தட்டி பறித்த இளையராஜாவா நேர்மையானவரா… அவர் சொல்வது எப்படி உண்மையாக இருக்கும்…’ என்று குமரவேல் போன்ற அதிருப்தியாளர்களை வைத்து பேச வைக்க திட்டமிடுகிறார்களாம்.

சமீபத்தில், தனுஷ் நற்பணி மன்றம் தொடங்கி, கட்சியை அறிமுகப்படுத்திவிட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன், அதன் நடுவில் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட கொடியினை வடிவமைத்துள்ளனர் தனுஷ் ரசிகர்கள். நட்சத்திரம் நடுவில் தனுஷ் கும்பிடுவதைப் போன்ற புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. அதன்மேல், “எண்ணம் போல் வாழ்க்கை” என்று தனுஷின் பிரபலமான வசனம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சூழலில், தென்மாவட்டங்களைச் சேர்ந்த சில சிறு கட்சி பிரமுகர்களும் சமுதாய தலைவர்களும் தனுஷை நெருங்கி, அவரை அரசியலுக்குள் இழுக்க திட்டமிடுகிறார்களாம். ‘த.வெ.க ஆட்சியை பிடித்ததிலிருந்து நாமும் ஒரு கை பார்த்துவிடலாம் என மனநிலையில் ஒரு சில நடிகர்கள் இருக்கிறார்கள். அந்த ஆசையில் தனுஷ் இருந்தால், அவருமே நேரடியாகக் களத்தில் குதித்துவிடுவார்’ என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.

வி.சி.க முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தி.மு.க-வில் இணையப் போகிறார், தனிக் கட்சித் தொடங்கி திருச்சி கிழக்கில் போட்டியிடப் போகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அந்தச் சூழலில், ‘ஆளூர் ஷாநவாஸை எப்படியாவது என்னை வந்து சந்திக்க வையுங்கள்’ என முன்னணி நிர்வாகிகளுக்கு கறார் உத்தரவு போட்டிருந்தாராம் திருமாவளவன். அதைத் தொடர்ந்து தனியார் ஹோட்டலில் இருவரும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

ஆளூர் ஷாநவாஸ்
ஆளூர் ஷாநவாஸ்

அப்போது, ‘நம் கட்சி ஆட்களை தூக்குவதில் தி.மு.க முனைப்பு காட்டுகிறது.. உங்களிடம் பேசியிருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி எந்த முடிவையும் நீங்கள் எடுத்துவிடக் கூடாது’ என வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதோடு, ‘வி.சி.க விருது வழங்கும் நிகழ்வுக்கு நீங்கள் அவசியம் வர வேண்டும்’ என்றாராம் திருமா. அவர் கேட்டுக்கொண்டபடியே நிகழ்ச்சிக்கு வந்த ஆளூர் ஷாநவாஸ், நிகழ்ச்சியில் எதுவும் பேசவில்லை.

விழாவுக்கு அவர் வந்ததிலேயே திருமாவுக்கு பெரு மகிழ்ச்சி. அதேசமயம், ‘த.வெ.க அரசையும் விஜய்யையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் ஷாநவாஸ் இல்லை. என்ன முடிவெடுப்பது என்ற தெளிவு அவருக்கே இல்லை’ என்கிறார்கள் விவரப்புள்ளிகள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சுயதொழில் தொடங்க ஆசையா? – தமிழ்நாடு அரசின் 4 அதிரடி தொழில் மேம்பாட்டுப் பயிற்சிகள் – முழு விவரம்!

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII),...

“திருமாவளவன்: பாலுக்கும் காவல் – பூனைக்கும் காவல் என்கிறார்" – நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``கரூரில்...

தமிழ்நாடு மின்துறையில் நுழையும் AI: சென்னை ஐஐடி-யுடன் கைகோக்கும் மின்வாரியம்! – பலன் என்ன?

தமிழக மின்கட்டமைப்பை தரம் உயர்த்தி, நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தடையற்ற மின்...

`மாணவர்கள் பற்றாக்குறை' – 3 அரசு பள்ளிகள் மூடல்… உசிலம்பட்டியில் அதிர்ச்சி!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதி பெரும்பாலும் விவசாயம் சார்ந்த மிகவும் பின்...