கடந்த மாதம் திருநெல்வேலியில் நடைபெற்ற விவசாயிகள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பேசிய வேளாண் அமைச்சர் ஆர்.வினோத், விவசாயிகளின் குரலுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என உறுதி அளித்தார். குறிப்பாக AI, டிரோன் பயன்பாடு மற்றும் காலநிலை முன்னறிவிப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், 2026-27 நிதியாண்டிற்கு 131.36 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானிய உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 05) முதலமைச்சர் விஜய் தலைமையில், வேளாண் அமைச்சர் ஆர்.வினோத் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் மற்றும் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500 குறைந்தபட்ச ஆதார விலை, நில உரிமையாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 விதைப்பு கால நிதி மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு ‘உழவர் உரிமை அட்டை’ மூலம் ரூ.10,000 வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், பனைமர பாதுகாப்பு, வேளாண் வானிலை அறிவியல் மையம், 100% பயிர்க்காப்பீடு, சொட்டு நீர் பாசன மானியம் 90% ஆக உயர்வு, 5 லட்சம் விவசாயக் குளங்கள், தஞ்சாவூரில் நம்மாழ்வார் இயற்கை விவசாயக் கல்லூரி மற்றும் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவிப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம், விவசாயிகள் தரப்பிலிருந்து முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.




