வேலூரில் உள்ள தி.மு.க மாவட்ட அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரந்தோறும் 6 நாள்களிலும் மதிய உணவு வழங்கப்படுகிறது.
2019-ம் ஆண்டு, கொரோனா நோய்தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருந்த சமயம், உணவகங்களும் மூடப்பட்டிருந்ததால், ஆதரவற்ற பலரும் பசியால் வாடினர். அப்போது, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்த தி.மு.க மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார், தன்னால் முடிந்த உதவிகளை ஏழை, எளிய மக்கள் பெரும்பாலானோருக்குச் செய்தார்.
சாம்பார் சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், நெய் சாதம், வெஜ் பிரியாணி என்று தினம் ஒரு உணவு சமைத்து பரிமாறப்பட்டு வருகிறது. தொடக்கத்தில், தினந்தோறும் ஆயிரம்பேர் சாப்பிடும் வகையில் உணவு சமைக்கப்பட்டது.
கொரோனா காலத்துக்குப் பிறகு, எண்ணிக்கை குறைந்ததால், வழக்கமான நடைமுறையாக தினமும் 250 பேருக்குச் சமைக்கப்படுகிறது. கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்திலும், இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருந்த நந்தகுமார், ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் ஒருநாள்கூட இடைவெளிவிடாமல் மதிய உணவு வழங்குவதை வாடிக்கையாக்கியிருந்தார்.
மூன்றாவது முறையாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட நந்தகுமார், வெற்றி வாய்ப்பை இழந்தபோதும், தனது அன்னதான சேவையை இரண்டாயிரம் நாள்களைக் கடந்தும் சிறப்பான முறையில் செய்துகொண்டிருக்கிறார்.

இதுபற்றி, தி.மு.க மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமாரிடம் கேட்டபோது, “கொரோனா காலத்தில் மக்கள் எல்லோரும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அவங்களுக்கு நம்மளால முடிஞ்சதை செய்யணும்ங்கிறதுக்காக மதிய உணவு வழங்குற சேவையை பார்ட்டி ஆபீஸ்ல தொடங்கி வச்சேன்.
ஆதரவற்றவங்க முதற்கொண்டு அன்றாடங்காய்ச்சியா இருக்கிற உழைக்கிற மக்கள் வரையிலும் வயிறாரச் சாப்பிடுறாங்க. இதுல பெரிய மனநிறைவு கிடைக்குது. மதிய உணவு வழங்குறதை எப்பவும் நிறுத்த போறது கிடையாது’’ என்றார் புன்னகைத்து.




