சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது தவெக. வெற்றிக்குப் பிறகு முதல்முறையாக விஜய் இன்று பனையூர் அலுவலகம் வந்திருந்தார். 106 எம்.எல்.ஏக்களையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். எம்.எல்.ஏக்களிடம் விஜய் என்ன பேசினார்?
தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றிருந்தாலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தவெகவால் ஆட்சியமைக்க முடியுமா அப்படி ஆட்சியமைத்தாலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா எனும் குழப்பம் பல எம்.எல்.ஏக்களுக்கே இருந்திருக்கிறது.
தங்களின் சந்தேகத்தை சிலர் விஜய்யிடமே கேட்டிருக்கின்றனர். அதற்கு விஜய் சொன்ன பதிலை கேட்டு எம்.எல்.ஏக்கள் பயங்கர உற்சாகமாக பனையூரை விட்டு கிளம்பியிருக்கின்றனர். விஜய்யிடம் பேசிவிட்டு வந்த எம்.எல்.ஏக்கள் சிலரிடம் பேச்சுக்கொடுத்தோம். ‘தலைவர் தேர்தலுக்கு முன்பிருந்தே நம்பிக்கையுடன்தான் இருந்தார். மக்கள் நம்மை மாற்றமாக பார்க்கிறார்கள். நம் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நீங்கள் தைரியமாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்யுங்கள் என்றார்.

வாக்குப்பதிவுக்கு பிறகும் எங்களை நேரில் அழைத்துப் பேசினார். கருத்துக்கணிப்புகள், வெளியில் பேசுவோரின் விமர்சனங்கள் எதையும் கருத்தில் கொள்ளாதீர்கள். நாம்தான் வெல்லப்போகிறோம். மே 4 நமக்கான ஆள் என்று கூறி எங்களின் கள அனுபவங்களையும் கேட்டறிந்து அனுப்பினார். இப்போதும் அதே உற்சாகத்துடன் தலைவர் இருக்கிறார். பெரும்பான்மை பற்றி எங்களுக்கு சந்தேகம் இருந்த போதும் தலைவர் பெரும் நம்பிக்கையோடு இருக்கிறார். ‘நாம் அறுதிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைப்போம். கவலையே வேண்டாம்’ என உற்சாகப்படுத்தி அனுப்பியிருக்கிறார்’ என்றனர்.
விஜய் ‘அறுதிப்பெரும்பான்மை’ எனப் பொடி வைத்துப் பேசியதால் வேறு கட்சிகள் சிலவற்றிடம் ஆதரவுக்காக தலைமைப் பேசி முடித்துவிட்டது என எம்.எல்.ஏக்கள் ஏக உற்சாகம் அடைந்திருக்கின்றநர்
ஆளுநர் அர்லேக்கரை சந்திக்க நாளை நேரம் கேட்டிருக்கிறார் விஜய். தன்னை முதல்வராக எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்திருக்கும் கடிதத்தோடு ஆட்சியமைக்க உரிமைக் கோரவிருக்கிறார். நாளை மறுநாள் நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழாவை நடத்தவும் ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், வெளியூர் எம்.எல்.ஏக்களை மகாபலிபுரத்திலுள்ள தனியார் ரெசார்ட்டில் தங்கியிருக்குமாறு தவெக தலைமை அறிவுறுத்தியிருக்கிறது.




