காய் நகர்த்திய பொன்முடி… கைவிரித்த அறிவாலயம்!
விழுப்புரம் மாவட்டத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக மாவட்டச் செயலாளராகவும், தி.மு.க ஆட்சிக் காலங்களில் அமைச்சராகவும் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் பொன்முடி.
ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் சி.வி.சண்முகத்தால் சொந்தத் தொகுதியான விழுப்புரத்தில் வீழ்த்தப்பட்ட பிறகு, திருக்கோவிலூர் தொகுதிக்கு ஒதுங்கிக் கொண்டார். தற்போது தி.மு.க வலுவாக இருக்கும் இந்த சூழலில், தன்னுடைய மகன் கௌதம் சிகாமணியை அரியணையில் அமர வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
அதன்படி விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி தொகுதியை தன்னுடைய மகனுக்காக கேட்டு கேட்டு காய் நகர்த்தினார் பொன்முடி. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று மறுப்பு தெரிவித்துவிட்டதாம் அறிவாலயம்.
அதையடுத்து, `எனக்கு கூட சீட் வேண்டாம். எனக்கு பதில் என் மகன் திருக்கோவிலூர் தொகுதியிலேயே போட்டியிடட்டும். ஆனால் என் மகனுக்கு விழுப்புரத்தை கொடுங்கள்’ என்று தன்னுடைய இறுதி அஸ்திரத்தை கையிலெடுத்திருக்கிறார் பொன்முடி.
அதுகுறித்து நம்மிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சிலர், “விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி தொகுதியைத்தான் மகனுக்காக பொன்முடி முதலில் கேட்டார்.
ஆனால் அந்த இரண்டு தொகுதிகளிலும் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களை மாற்றினால் நமக்கு பின்னடைவு ஏற்படலாம் என்று பென் டீம் எச்சரித்ததால் அதற்கு `நோ’ சொல்லிவிட்டார் தளபதி. அதனால் மகனுக்காக தேர்தல் அரசியலில் இருந்து விலகும் முடிவில் இருக்கிறார் பொன்முடி.
கூப்பிட்டாலும் வராத உடன்பிறப்புகள்… கண்டுகொள்ளாத ஆட்சியர் அலுவலகம்!
விழுப்புரத்தில் அறிவாலயம் தொடங்கி, பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அனைத்தயும் கொண்டு வந்தவர் பொன்முடிதான். அதிலும் அறிவாலயத்தில் இருக்கும் மாவட்டச் செயலாளர் அறை, சென்னை அறிவாலயத்தைவிட அதிகமாக இழைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் அவர் பார்த்துப் பார்த்துக் கட்டிய அந்த அறிவாலயத்தில் இன்று மூன்றாவது மனிதரைப் போல வந்து செல்லும் நிலையில் இருக்கிறார். ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் கூட அவரின் பேச்சைக் கேட்பதில்லை.
சமயத்தில், `விசாரித்து சொல்கிறோம்…’ என்று வரும் பதில்களால் நொந்து போயிருக்கிறார்கள் தந்தையும், தனயனும். அதேபோல முன்பு அவரோ அல்லது அவர் மகன் கௌதம சிகாமணியோ வந்தால், பின்னால் பத்து கார்களில் 50 பேர் வருவார்கள்.

வீட்டு வாசலில் அவர்களை பார்ப்பதற்கு தினசரி நூறுபேராவது வருவார்கள். ஆனால் இப்போது போன் செய்து நிர்வாகிகளை கூப்பிடும் நிலைமையாக மாறியிருக்கிறது. அப்படியே கூப்பிட்டாலும் ஒருசிலரைத் தவிர யாரும் வருவதில்லை. அதில் துவண்டு போனதால்தான், விழுப்புரம் தன் கையில் இருக்க வேண்டும் என்றும் மாவட்டத்தின் தலைநகர் கையில் இருந்தால்தான் மரியாதை என்றும் நினைக்கிறார் பொன்முடி.
`எனக்கு சீட் வேண்டாம்…’
அதன்படி விழுப்புரம், விக்கிரவாண்டி அல்லது விழுப்புரம், திருக்கோவிலூர் தொகுதிகளின் மாவட்டச் செயலாளராக தன் மகனை அறிவிக்க வேண்டும் என்று துரைமுருகன் மூலமாக தலைமையிடம் தூது விட்டு வருகிறார் பொன்முடி. அதற்காகத்தான் தனக்கு சீட் வேண்டாம் என்று தலைமையிடம் கூறியிருக்கிறார்.” என்றனர் விரிவாக.
தற்போது செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மாவட்டச் செயலாளராக கே.எஸ்.மஸ்தானும், விழுப்புரம், வானூர் தொகுதிகளை உள்ளடக்கிய மத்திய மாவட்டச் செயலாளராக டாக்டர் இரா.லட்சுமணனும், திருக்கோவிலூர், விக்கிரவாண்டி தொகுதிகளை உள்ளடக்கிய தெற்கு மாவட்டச் செயலாளராக டாக்டர் கௌதம சிகாமணியும் இருக்கின்றனர்.
அறிவாலயத்தின் அதிகார மையமாக இருந்தப் பொன்முடி, இப்போது மாவட்டச் செயலாளர் பதவிக்காக தூதுவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதுதான் விழுப்புரம் அரசியலின் உச்சகட்ட டிவிஸ்ட்.




