திமுக கூட்டணி ‘வலிமை’யான கூட்டணி என்று சொல்லிக்கொண்டாலும், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகளில் தொகுதி பங்கீட்டில் இன்னமுமே இழுப்பறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில், வேட்பாளர் நேர்காணலுக்கான வீடியோவை வெளியிட்டுள்ளார் திருமாவளவன். அதில் தொகுதி பங்கீடு குறித்து அவர் பேசியிருப்பதாவது…
“மக்கள் நலக்கூட்டணியில் இருந்தபோது 25 தொகுதிகள் கிடைத்தது. அப்போது என்னால் சுதந்திரமாக முடிவெடுக்க முடிந்தது.
10-க்கும் குறைவான தொகுதிகளில் போட்டியிடும் போது, நீண்ட காலமாக காத்திருப்பவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
மேலும், அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதும் கருத்தாக உள்ளது. அதை நாம் ஒவ்வொரு தேர்தல்களிலும் எதிர்கொள்கிறோம்.
ஏன் தோற்றோம்? -திமுக பதில்
‘அரக்கோணத்தில் ஏன் தோற்றோம்?’ என்று கேட்டபோது, திமுக, ‘நீங்கள் வெளியில் இருந்து ஆளை இறக்குகிறீர்கள். அந்த ஊரை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தவில்லை’ என்று கூறியது. வானூர் தோல்விக்கும் இது தான் கூறப்பட்டது.
ஆனால், வேடிக்கை என்னவென்றால், நாம் போட்டியிட்ட 6 தொகுதிகளிலுமே தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு பகுதி ஆள்களைத் தான் போட்டியிட வைத்தோம்.
வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் கட்சி தலைமைக்கு நெருக்கடி, அழுத்தம் இல்லாமல் சுதந்திரத்தோடு முடிவு எடுக்கும் வாய்ப்பை இயக்கத் தோழர்கள் நமக்கு வழங்க வேண்டும்.
தொகுதி பங்கீட்டை போராடி பெற வேண்டியதாக இருக்கிறது. தேர்தலில் வேட்பாளர்கள் செலவு செய்ய வேண்டிய நிதியை என்னுடைய தோழமைகளிடம் பேசி பெறுகிறேன். நெருக்கடிக்கு நடுவே வேட்பாளரை தேர்ந்தெடுக்கிறேன். இப்படி அனைத்தையும் நானே செய்கிறேன்.
25 ஆண்டுகளைக் கடந்தும், இந்தக் களம் இன்னும் நமக்கு புதிதாகவே இருக்கிறது.

வளர்ச்சிக்கு தடை
நாம் எந்தவிதத்திலும் வலிமை பெற்றுவிடக் கூடாது என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை தான் இங்கே அதிகம்… அரசியல் சக்தியாக பரிணமித்துவிடக்கூடாது என்று எண்ணக்கூடியவர்கள் தான் இங்கே பெரும்பான்மை.
இவர்கள் வளர வேண்டும் என்று ஊக்குவிக்க பெரிதாக யாரும் இல்லை என்பது தான் யதார்த்தம்.
இருந்தாலும், 25 ஆண்டுகளாக தாக்குப்பிடித்து நிற்கிறோம். தவிர்க்க முடியாத சக்தியாகவும் உருமாறி உள்ளோம்.
ஊடகங்கள் திருமாவளவனை ‘கேம் சேஞ்சர்’ என்று சொல்கின்றன… திருமாவளவன் நினைத்தால் தமிழ்நாடு அரசியலின் திசை வழிப்போக்கை ஒரு சில நிமிடங்களில் மாற்றிவிட முடியும் என்று சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.
ஆனாலும் கூட, அப்படிப்பட்ட ஒரு அரசியலை நமக்கு செய்ய விருப்பமில்லை. இங்கு புதிய மரபு மற்றும் நாகரிகமான அரசியல் செய்து வருகிறோம்.

இந்த அணுகுமுறைகள் எல்லாம் சரி வராது என்று பலர் நினைக்கலாம். அனைவரும் அறிந்த பல வாய்ப்புகள் வந்தும் நாம் முன்னிறுத்தக்கூடிய அரசியலை பாதுகாக்க… விசிக வலிமையை தக்க வைக்கவும் இன்று நாம் மத சார்பற்ற கூட்டணியில் இணைந்து நிற்கிறோம்.
தொகுதி பங்கீட்டில் பெருந்தன்மையாக நடந்துகொள்கிறோம். தற்காலிகமாக வெற்றிகரமான அணுகுமுறை என்று தோன்றினாலும், காலத்திற்கும் போற்றக்கூடிய வெற்றிகரமான யுத்தி.
அதனால், எத்தனை தொகுதிகளைப் பெற்றாலும் நம்முடைய எதிர்காலத்தோட வெற்றி. இன்று நம்பகத்தன்மை இழந்து பெறும் வெற்றி ஆகும்.
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வரும். அதற்காக இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நமது யுக்தியை மாற்றி, ‘இது தான் வெற்றிகரமான யுக்தி’ என்று நினைத்துக்கொண்டிருக்க முடியாது.
எனவே, மிகக் குறைவான எண்ணிக்கையைப் பெற்றால் கூட, நமது அரசியல் நிலைப்பாட்டை மேலும் வலிமையாக்குவதாக இருக்கும்”. என்றிருக்கிறார்.




