20
April, 2026

A News 365Times Venture

20
Monday
April, 2026

A News 365Times Venture

'மீனவர்கள் பிரச்னைக்கு மோடி தீர்வு காண வேண்டும்' – தொல்.திருமாவளவன்

Date:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம்,  காட்டத்தூரில் உள்ள  பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

கருப்பு தினம்

அப்போது பேசிய அவர், “நடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்துள்ளது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம் இன்று என்று சொல்லக்கூடிய அளவுக்கு வக்ஃபு வாரியத்  சட்ட திருத்த மசோதாவை பா.ஜ.க அரசு நிறைவேற்றி உள்ளது. இது, இஸ்லாமியர்களுக்கு  எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை. ஆளும் பி.ஜே.பி அரசு தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக  இதனை அரங்கேற்றி உள்ளனர்.  வேறு எந்த மதத்தின் சொத்து விவகாரங்களில் தலையிடாத மத்திய அரசு வக்ஃபு வாரியத்தில் அடாவடித்தனமாக தலையிடுகிறது.

வக்ஃபு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத நபர்களை நியமிப்பதற்காக  சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர். இதற்கு, பா.ஜ.க வெளிப்படைதன்மை எனக் கூறுகின்றனர். பௌத்த மதத்தில் புத்த விகாரில் பௌத்தர் அல்லாதவர்களை நியமித்து இன்று வரை நடைமுறைப்படுத்த வருகின்றனர். இதனை எதிர்த்து புத்த பிட்சுகள் போராடி வருகின்றனர். மத்திய அரசின் இந்த மத விரோதப் போக்கை விடுதலை சிறுத்தை கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து வரும் 8-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர் உள்ளோம். 232 வாக்காளர்கள் திருத்தச் சட்டத்திற்கு எதிர்த்து வாக்களித்துள்ளோம். மாநிலங்களவையில் 95 பேர் எதிர்த்து வாக்களித்துள்ளோம். தமிழகத்தில் அ.தி.மு.க-வும் எதிர்த்து வாக்களித்தது ஆறுதல் அளித்துள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பா.ஜ.க இதனை சாதித்திருக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக கூட்டணி கட்சிகளும் பா.ஜ.க-விற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. பிரதமர் மோடி இலங்கை பயணத்தில் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். மோடி இது குறித்து பேசுவார் என எதிர்பார்க்கிறோம். நீட் மசோதாவை மீண்டும் குடியரசுத் தலைவர் நிராகரித்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த சூழலில் 9-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தினை தமிழக முதல்வர் கூட்டி உள்ளார்.

thol.thirumavalavan

அவரது முயற்சிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளோம். நீட் விவகாரத்தில் அரசியல் காரணங்களை முன்னிறுத்தாமல் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் ஒன்று திரள வேண்டும். தி.மு.க அரசு பதவி ஏற்ற காலத்தில் இருந்து நீட் எதிர்ப்பை முழு மனதோடு கடைபிடித்து வருகிறது. அவ்வாறு முயற்சி எடுக்காமல் இருந்தால் வாக்குறுதி காற்றில் பறக்க விட்டார்கள் என கூறலாம். விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் மத்திய ஆட்சியாளர்கள் தான்.

தமிழக ஆட்சியாளர்கள் மீது விமர்சனம் செய்வது வேடிக்கையாக உள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் பள்ளிக்கல்வித்துறையில் சிறந்து விளங்கி வருகிறது. மரத்தடி வகுப்புகள் இன்றும் நடக்குமானால், அதற்கு உடனடியாக உரிய தீர்வு காணப்பட வேண்டும். பள்ளி வகுப்பறை எண்ணிக்கைகளை பெருக்க வேண்டும். வக்ஃப் வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து பீகாரில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி உள்ளனர். இது, கூட்டணிக் கட்சிகளுக்கு பெரிய சவுக்கடி” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related