தமிழ்நாட்டின் முதல் கருவாட்டுச் சந்தையானது மயிலாடுதுறை ரயிலடிக்கு அருகேயுள்ள சித்தர்காடு பகுதியில்தான் தொடங்கப்பட்டது. நூற்றாண்டை கடந்த போதும் இன்றும் பழைமை மாறாமல் இயங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கூடும் இச்சந்தையில் வாளை, கெண்டை, கெளுத்தி என அனைத்து வகையான கருவாடுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் என 100-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் இச்சந்தையில் வந்து விற்பனை செய்கின்றனர்.
இங்கு நாளொன்றுக்கு 400-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கருவாடுகளை வாங்கிச் செல்வதாகக் குறிப்பிடுகின்றனர். தமிழ்நாட்டிலேயே முதன்முதலாகத் தொடங்கப்பட்ட சந்தை நூற்றாண்டைக் கடந்த நிலையில் அடிப்படையான வசதிகள் இல்லாமல் இருப்பதை அறிந்து அங்கிருந்த வியாபாரிகளிடம் பேசினோம்.
“இந்தச் சந்தையை ஆரம்பிச்சி நூறு வருசம் ஆகிடுச்சி, நூறு வருசம் ஆகிடுச்சின்னு நல்லா பெருமை பேசிக்கிறாங்க. ஆனால், சந்தையில் ஒன்னும் இல்லாமா நாங்க படுற கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். நாங்க எல்லாம் ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் பண்ண சனிக்கிழமை காலையிலேயே சரக்கெல்லாம் எடுத்துட்டு இங்க வந்துடுவோம். சரக்கையெல்லாம் வித்திட்டு ஞாயிற்றுக்கிழமை நைட்டு இல்ல திங்கட்கிழமை காலையிலதான் ஊருக்குப் போவோமே.
இந்த ரெண்டு நாள் நைட்டு நாங்க தங்குறதுக்கு இடம்கூட இல்லாம, கிடைக்குற இடத்துலையும் கொசுக்கடியிலயும்தான் படுத்து தூங்குவோம். இன்னும் ஒரு சிலர் ஜங்ஷன்ல போய் படுப்பாங்க. அங்க உள்ள போலீஸ்காரு இங்க எல்லாம் படுக்கக் கூடாதுன்னு விரட்டி அடிச்சிடுவாரு.

படுக்கத்தான் பிரச்னையா இருக்குன்னா, ஆத்திர அவசரத்துக்கும் குளிக்கிறதுக்கும் அதைவிட பெரும் பிரச்னையாதான் இருக்கும். வெட்டவெளியில தான் எல்லாம் செய்ய வேண்டியிருக்கு. குளிக்கிறதுகூட அப்படித்தான். அந்தச் சந்தைக்குள்ள சுத்தி காம்பவுண்டும் கிடையாது. குடிநீருக்கு… குளிக்கிறதுக்கு தண்ணி வசதியும் சரியா இருக்காது. குடிக்கக்கூட டெண்டர் எடுத்தவங்க கொஞ்சம் ரெடி பண்ணி தராங்க. ஆனா, அந்த தண்ணியும் தீர்ந்துடுச்சின்னா வெளியில கொஞ்சம் தூரம் நடந்து போயிதான் தண்ணீர் குடிக்கணுமே. குளிக்க இந்த மோசமான டேங்க் தண்ணிய தான் பயன்படுத்துறோம். அதுனால எதாவது நோய் வந்துடுமோன்னு பயமாவே இருக்கும்” என்றனர்.
மேலும் “ஒரே ஒரு பிளக் போர்டு தான் இங்க இருக்கு . வெயிட் போடுற மிஷினுக்குக்கூட சார்ஜ் போட முடியல. இதனால வாரா வாரம் வெயிட் போடுற மிஷினையும் தூக்கிட்டுப் போறதும் எடுத்துட்டு வர்றதுமாவே இருக்கு. இந்த கொட்டாய் எல்லாம் நாங்க எங்க சொந்த செலவுலதான் போட்டோம். இதுக்குள்ள ஒரு லைட்கூட இல்ல. இரண்டு கடைக்கு ஒரு லைட்டுன்னு நடைப்பாதையில மட்டும்தான் இருக்கு.
கடைகளும் சரியாக இல்லாததுனால மழைக்காலத்துல கருவாட கொட்டுறதும் அள்ளுறதுமாவே தான் இருப்போம். மழைக்காலத்துல சந்தையும் சேறும் சகதியுமா இருக்குறதுனால, யாரும் அவ்வளவா வாங்கவும் வர மாட்டாங்க. அப்படியே கருவாட்டு வாங்க வந்தாலும் கருவாடு சில்லுப்பா இருக்கு வேணாம்னு போயிடுவாங்க. மழைக்காலத்துல நாங்க இந்தச் சந்தைக்கு வந்தாலே நட்டத்துலதான் திரும்பிப் போகணும். இங்க பின்னாடி கொஞ்சம் காடா வேற இருக்கு. கருவாட்டு வாசனைக்கு ஊரே வரும்ன்னு சொல்லுவாங்க. அதுமட்டும் வராது பாம்பு, பூச்சிலாம்கூட வரும். இங்கையும் பாம்பு எல்லாம் வரும். அதுனால இங்க படுத்து இருந்தாகூட பயத்தோடதான் இருப்போமே. நாங்களும் பல வருசமா பல அரசு அதிகாரிங்ககிட்ட பேசுறோம். பல பேர்கிட்ட எங்களோட குறைகளை சொல்றோம். ஆனா யாரும் எங்களை கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க.

முறையான கழிவறை, குளியல் அறை, ஓய்வெடுக்கும் அறை, முக்கியமான குடிநீர், மின்சார வசதி, கம்பவுண்டு சுவருடன் கூடிய புதிய கடைங்கன்னு அரசு எங்களுக்கு எல்லாத்தையும் ஒவ்வொன்றாகச் சீக்கிரம் செஞ்சிக்கொடுக்கணும், அது செஞ்சிக்கொடுத்துட்டாலே எங்கள மாறி பொழப்பு நடத்துறவங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும். ஆட்சி நடத்துற புதிய அரசாச்சும் எங்கள வழக்கம் போல ஏமாத்தாமா சீக்கிரம் செஞ்சிக்கொடுக்கணும்” என்று கூறினர்.
இது குறித்து ஒப்பந்ததாரர் சஞ்சீவ் கூறுகையில், “சந்தையில் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. தற்பொழுதுதான் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஆண், பெண் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கென மூன்று கழிவறைகள் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது.











ஆனால், விற்பனையாளர்களே 80- க்கும் அதிகமானோர் இருக்கின்றனர். மேலும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். எனவே இன்னும் மூன்றுக்கும் மேற்பட்ட கழிவறைகளும் அத்தியாவசிய தேவையாகத்தான் இருக்கிறது. இம்மாத தொடக்கத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தையை ஆய்வு செய்து, தரைகள் மற்றும் கடைகள் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். விற்பனையாளர்கள் சிரமமின்றி விற்பனை செய்ய தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு விரைந்து செய்து கொடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட இந்துசமய அறநிலைத்துறை செயல் அலுவலர் அன்பரசன் கூறுகையில், “மீன்வளத்துறையின் கீழ் ஒரு சில உதவிகள் செய்து தருவதாக கூறி இருக்கிறார்கள். மேலும் சில உதவிகளை நபார்டு அமைப்புகள் மூலம் செய்யலாம் என்றும் இருக்கிறோம்” என்றார்.




