அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்கள் மீது தாக்குதல் நடத்தியபோது, ஈரான் கொடுத்த பதிலடி – மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சொத்துகள் மற்றும் ராணுவ தளங்களைத் தாக்கியது ஆகும்.
இந்தத் துல்லிய தாக்குதல் எப்படி நடந்தது என்பது குறித்து ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்னொரு நாட்டில் இருக்கும் எதிரி நாட்டின் சொத்துகளைத் தாக்க, அது எங்கிருக்கிறது, எங்கே தாக்கினால் சரியாக இருக்கும் என்பதை அறிய வேண்டும். அதற்கு அந்தப் பகுதிகளைக் கண்காணிக்க வேண்டும்.
சீனாவின் ‘செயற்கைக் கோள்’
இந்தக் கண்காணிப்பிற்காக தான் சீனாவின் செயற்கைக்கோளைப் பயன்படுத்தியுள்ளது ஈரானின் புரட்சிக்கரப் படை.
ஓராண்டிற்கு முன்பு, சீனாவின் ‘Earth Eye’ நிறுவனத்திடம் இருந்து TEE-01B செயற்கைக்கோளை வாங்கியுள்ளது ஈரானின் புரட்சிக்கரப் படை.
இந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை, தாங்கள் டெலிவரி கொடுக்கும் செயற்கைக் கோளை பூமியிலேயே தந்துவிடாது. அது ஆர்டர் செய்யப்பட்ட செயற்கைக்கோளை சரியாக ஆர்பிட்டில் நிலைநிறுத்தி தான் டெலிவரி செய்யும்.
இந்தச் செயற்கைக்கோள் தங்கள் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களைக் கண்காணிப்பதுபோல நிலைநிறுத்த ஈரான் கேட்டிருக்கிறது.
அப்படி தான் இந்தச் செயற்கைக்கோள் ஈரானின் கைகளுக்கு சென்றுள்ளது.
ஈரானுக்கு இன்னொரு ‘ப்ளஸ்’
இந்த ஆர்டரில் ஈரானிற்கு இன்னொரு ப்ளஸும் கிடைத்துள்ளது. அதாவது சீனாவின் பீஜிங்கை சேர்ந்த செயற்கைக்கோள் சேவை நிறுவனம் Emposat.
இந்த நிறுவனத்திற்கு ஆசியா, லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் செயற்கைக்கோளை கட்டுப்படுத்தி, இயக்கும் நெட்வொர்க் இருந்துள்ளது.
அந்த நெட்வொர்க்குகளுக்கான அனுமதியும் ஈரானுக்குக் கிடைத்துள்ளது.
ஆக, இந்தச் செயற்கைக்கோள் மற்றும் நெட்வொர்க் உதவி மூலம் தான் ஈரான் சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதலை நடத்தியுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.




