மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே. இவர் மறைந்த பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான கோபினாத் முண்டேயின் மகள் ஆவார்.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சந்திராப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மாசு பாதிப்பு குறித்து பதிலளிக்கும்படி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கு சட்டமன்றத்தில் பதிலளித்த அமைச்சர் பங்கஜா முண்டே, ”இப்பிரச்னை குறித்து தெரிந்துகொள்வதற்காக மாசு கட்டுப்பாட்டுத்துறை இணை இயக்குனர் சதீஷ் பட்வெல், மாசு கட்டுப்பாட்டுத்துறை உறுப்பினர் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவேந்திர சிங் ஆகியோரை அழைத்திருந்தேன்.
ஆனால் இரண்டு பேரும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் என்னால் சந்திராப்பூர் மாசு பாதிப்பு குறித்த தகவல்களை முழுமையாகத் தெரிவிக்க முடியவில்லை.
இரண்டு பேரும் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது மட்டுமல்லாது தங்களால் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று கூறி மெசேஜ் அனுப்பி வைத்தனர்.
அதிகாரிகள் இது போன்று நடந்து கொள்வதால் அமைச்சர்களால் பொதுமக்களுக்குப் பதிலளிக்க முடியாமல் போய்விடுகிறது” என்று குறிப்பிட்டார்.
சட்டமன்றத்தில் தற்காலிக சபாநாயகராக இருந்த திலீப் லாண்டே, அமைச்சரின் அறிக்கைகளைப் பார்க்கும்போது அதிகாரியின் செயல் மிகப்பெரிய அலட்சியம் மற்றும் சட்டமன்றத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடியது என்று தெரிவித்தார்.
மேலும், சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவேந்திர சிங் மீது அரசு உடனே நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில், மாநில அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவேந்திர சிங்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் சுதிர் முங்கந்திவார், ‘அதிகாரியின் நடத்தை ஜனநாயகத்தின் கொடூரமான படுகொலை என்றும், அரசியலமைப்புக்கு அவமதிப்பு செய்யும் செயல் என்றும் சாடினார்.
மக்கள் பிரதிநிதிகளுக்குத் தாங்கள் பதில் கூற வேண்டியவர்கள் என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது இலாகா பூர்வ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நாளில் அனுமதி இல்லாமல் மும்பையை விட்டு வெளியில் செல்லக்கூடாது.




