தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்காக காங்கிரஸ் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. த.வெ.கவுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என வாக்குறுதி கொடுத்து வந்தது அக்கட்சி.
அதன் அடிப்படையில் காங்கிரஸ்ஸிற்கு கட்சிக்கு அமைச்சர் பதவி கொடுக்கபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
அதன்படி காங்கிரஸ் கட்சி சார்பில் மேலூர் தொகுதியில் போட்டியிட்ட விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்களில் பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் முன்னாள் எம்.பியாக இருந்த விஸ்வநாதன் மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். பட்டியலினத்தை சேர்ந்த விஸ்வநாதன் பொது தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருப்பதால் தான் அமைச்சர் பதவி கொடுக்கபட இருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
எப்படி வெற்றி பெற்றார் விஸ்வநாதன்?
தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் 27 தொகுதிக்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்த காங்கிரஸ் மேலூர் தொகுதியில் மட்டும் அறிவிக்காமால் இருந்தனர்.
காரணம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான மாணிக்கம் தாகூர் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தங்களுடைய ஆதரவாளர்களுக்கு சீட் பெற முயற்சி வந்ததால் வேட்பாளர் தேர்ந்தெடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர் சிதம்பரம் கட்சி தலைமையிடம் பேசி விஸ்வநாதனை வேட்பாளராக்கினார். பட்டியலினத்தை சேர்ந்தவரை பொது தொகுதியில் அறிவித்ததால் காங்கிரஸ் கட்சியினர் சிலர் அதிருப்தியானர்கள்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் கக்கனுக்கு பிறகு பட்டியலினத்தை சேர்ந்தவர்களால் இங்கு வெற்றி பெற முடியாத சூழ்நிலையே இருந்தது.
இதற்கு முக்கிய காரணம் தொகுதியில் மேலவளவு படுகொலை சம்பவம். அதோடு கிட்டதட்ட 25 ஆண்டுகளாகவே மேலூர் தொகுதி அ.தி.மு.கவே வெற்றி பெற்று வந்திருக்கிறது. இதனால் விஸ்வநாதன் வெற்றி பெறவே முடியாது என சொந்த கட்சியினர் போர்கொடி உயர்த்த தொடங்கினர்.
குறிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை தலைவர் சீனிவாசன் கட்சியிலிருந்து விலகி தனியாகவே கட்சியை தொடங்கும் அளவிற்கு உட்கட்சி மோதல் உஷ்ணமானது.
இறுதியில் டெல்லி தலைமை உட்கட்சி பிரச்னையை சரிகட்டவே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட தொடங்கினார் விஸ்வநாதன்.
மேலூர் தொகுதியை பொறுத்தவரை முக்குலத்தோர், முத்தரையர் சமூக வாக்குகள் அதிகம். அதற்கடுத்த மூன்றாவது இடத்தில் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் வாக்குகள் உள்ளன.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அ.தி.மு.கவிலிருந்து விலகி தி.மு.கவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன் மேலூர் தொகுதியில் உள்ள முத்தரையர் சமூக மக்களிடம் பேசி அவர்களின் வாக்குகளை காங்கிரஸ் பக்கம் திருப்பியுள்ளார்.

த.வெ.க வேட்பாளர் மதுரை வீரன் அ.தி.மு.க வாக்குகளை பிரித்ததால் 2,724 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் விஸ்வநாதன்.
இதன் மூலம் 35 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மேலூர் தொகுதியை கைப்பற்றியுள்ளது என்பதோடு, பொது தொகுதியில் பட்டியலினத்தை சேர்ந்தவர் வெற்றி பெற்றார் என்பதால் விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. !




