ஈரான் – இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருள்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்திருந்தது.
வணிக சிலிண்டர் தட்டுபாடு
LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் வணிக சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
அலைமோதும் கூட்டம்
இதனிடையே தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என வதந்தி பரவிய நிலையில், பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் கூட்டம் அலைமோதி இருக்கிறது.
வாகனங்களில் ஃபுல் டேங்க் நிரப்பியதோடு மட்டுமல்லாமல், குடங்கள், கேன்களிலும் பலர் பெட்ரோல், டீசல் வாங்கி செல்கின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா?
உண்மையிலேயே பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இருக்கிறதா? என்று தெரிந்துகொள்ள பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பி. முரளியிடம் தொடர்புகொண்டு பேசினோம்.
நம்மிடம் பேசிய அவர், ” தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடே இல்லை.
மொத்தம் 7000 பெட்ரோல் பங்குகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இப்போது வரைக்கும் நாங்கள் கேட்கும் பெட்ரோல், டீசலை ஆயில் கம்பெனிகள் அனுப்பிக்கொண்டுதான் இருக்கின்றன.
கையிருப்புகள் இருக்கின்றன
அவர்கள் குறைவாக எங்களுக்கு அனுப்புவது இல்லை. பொதுவாக பெட்ரோல் விற்பனையாளர்கள் 3 நாட்களுக்கு தேவையான பெட்ரோல்களை கையிருப்பு வைத்திருப்பார்கள்.
அந்தவகையில் பார்த்தால் எங்களிடம் பெட்ரோல், டீசல் கையிருப்புகள் இருக்கின்றன.
எவ்வளவு கேட்டாலும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலை தருகின்றன. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 90 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது.

அச்சப்பட வேண்டாம்
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்று வதந்திகளைப் பரப்புகிறார்கள். LPG தட்டுப்பாடு வந்ததால் மக்கள் அச்சத்தில் அளவுக்கு அதிகமான பெட்ரோல், டீசலை வாங்குகின்றனர்.
ஆனால் அளவுக்கு அதிகமாக வாங்கினால் பெட்ரோல், டீசல் விரைவில் காலியாகி செயற்கை தட்டுபாடு ஏற்படும். கேன், பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வாங்க வேண்டாம். அது சட்டப்படி தவறு.
தேவைக்கு ஏற்றமாதிரி மட்டும் பெட்ரோல், டீசல் வாங்கினால் போதுமானது. பெட்ரோல் தட்டுபாடு வந்துவிட்டது என்று யாரும் அச்சப்பட வேண்டாம். அப்படி ஒரு சூழல் தற்போது இல்லை” என்று நிலவரத்தை நம்மிடம் விவரித்தார்.




