1947 பிரிவினையின்போது நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால், “இந்தியாவிற்கு யாராலும் எந்தத் தீங்கும் செய்திருக்க முடியாது” என்றும், இது போன்ற துயரங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நாடு தனது வரலாற்றின் “இருண்ட பக்கங்களில்” இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
சித்தாாத்த நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டிய பின் நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், “பிரிவினையின்போது மோடி போன்ற ஒரு பிரதமர் இருந்திருந்தால், இந்தியாவிற்கு யாராலும் எந்தத் தீங்கும் செய்திருக்க முடியாது. கோடிக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். கேட்க யாருமில்லை, வலியைக் வெளிப்படுத்த யாருமில்லை. அதிகாரத்தில் இருந்தவர்கள் ‘சனாதன’ நாட்டைத் துண்டு துண்டாகப் பிரித்தனர். வரலாற்றின் அந்த இருண்ட பக்கங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள இந்த நாள் ஒரு தூண்டுதலாக அமைகிறது. இந்தச் சிக்கல் ஏன் எழுந்தது? எந்த மனிதர்களால் இது நடந்தது? குற்றவாளிகள் ஏன் தண்டிக்கப்படவில்லை?” எனக் கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து, பிரிவினையின்போது பகுதிகள் பிரிக்கப்பட்டது குறித்துப் பேசிய யோகி, “1947-இல் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. பாகிஸ்தான் ஆதரவாளர்கள் கோராத பகுதிகள்கூட பலவந்தமாகப் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதிகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன. பஞ்சாப் ஒப்படைக்கப்பட்டது. வங்காளத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதிகள் ஒப்படைக்கப்பட்டன. அதிகார வெறியின் காரணமாகவே இது செய்யப்பட்டது. 1947-ல் அமைதியாக இருந்தவர்கள், வாய்திறக்காதவர்கள், அரியணையின் மீதுதான் கண் வைத்திருந்தார்கள்.

எந்த வழியிலாவது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற பேராசை அவர்களுக்கு இருந்தது. வங்காளதேசத்தில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் தங்களின் ‘வாக்கு வங்கி’ பறிபோய்விடும் என்ற பயத்தினால் அவர்கள் மௌனமாக இருந்தார்கள். வாக்கு வங்கியைத் தங்களின் குடும்பச் சொத்தாக மாற்றி, அராஜகத்தைப் பரப்பினார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை பிரிக்கப்படாத இந்தியாவின் பகுதிகளாக இருந்தன. லக்னோ, கான்பூர், சம்ப்ஹால், அலிகார் மற்றும் சஹாரன்பூர் ஆகிய இடங்களில் தீ வைப்பதற்கும் சதிகள் தீட்டப்பட்டன. ஆனால் பொதுமக்கள் அவர்களை வெற்றிபெற அனுமதிக்கவில்லை” என்றார்.




