மகாராஷ்டிரா சட்டமேலவையில் காலியாகும் 9 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. உத்தவ் தாக்கரேயின் சட்டமேலவை உறுப்பினர் பதவியும் அடுத்த மாதம் காலியாகிவிட்டது. எனவே உத்தவ் தாக்கரே மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து மொத்தமுள்ள 9 பேரில் ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். அந்த அளவுக்குத்தான் எதிர்க்கட்சிகளுக்கு எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர்.
உத்தவ் தாக்கரே போட்டியிட்டால் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சியும் தெரிவித்து இருந்தது. உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகி சஞ்சய் ராவுத் நேற்று அளித்திருந்த பேட்டியில், வேட்பாளர் யார் என்பது வியாழக்கிழமை காலையில் தெரிய வரும் என்று குறிப்பிட்டார்.
ஆனால் இப்போது உத்தவ் தாக்கரே தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து இருக்கிறார். இதனால் அந்த இடத்திற்கு உத்தவ் தாக்கரேயின் சிவசேனா சார்பாக அம்பாதாஸ் தன்வே என்பவர் போட்டியிடுவார் என்று உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே அறிவித்து இருக்கிறார்.
இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது. இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு அவர் அளித்த பேட்டியில், ”உத்தவ் தாக்கரே போட்டியிடுவதாக இருந்தால் அவருக்கு ஆதரவு கொடுக்க தயார் என்று தெரிவித்து இருந்தோம். ஆனால் இப்போது அவர் போட்டியிடாததால் எங்களது கட்சியும் வேட்பாளரை நிறுத்தும்” என்று குறிப்பிட்டார்.
இது குறித்து பெயர் குறிப்பிடாத ஒரு காங்கிரஸ் நிர்வாகி கூறுகையில், ”கடைசி நேரம் வரை வேட்பாளர் யார் என்று தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்து கடைசி நேரத்தில் வேட்பாளரை அறிவித்து காங்கிரஸ் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு சிவசேனா(உத்தவ்) செய்து இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ் தரப்பில் நசீம் கான், சச்சின் சாவந்த், பிருத்விராஜ்சவான் உட்பட சிலரது பெயர்கள் வேட்பாளர் தேர்வுக்குப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலிலும் இதே போன்று ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு எதிர்க்கட்சிகளிடையே போட்டி ஏற்பட்டது.
இறுதியில் அந்த இடம் சரத்பவாருக்குக் கிடைத்தது. இப்போது அதே நிலைதான் சட்டமேலவை தேர்தலுக்கும் ஏற்பட்டுள்ளது.




