தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பழஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழஞ்சூர் செல்வம். இவர் திமுக-வில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மற்றும் மாநில வர்த்தக அணி துணைத் தலைவராக இருக்கிறார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு அமைச்சர் கே.என்.நேரு மூலம் காய்நகர்த்தி வருகிறார்.
பட்டுக்கோட்டையில் பழஞ்சூர் செல்வத்தின் மகன் திருமணம் நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
இதற்காக உதயநிதி மற்றும் திமுக அமைச்சர்களை வரவேற்கும் விதமாக விமரிசையான ஏற்பாட்டை பழஞ்சூர் செல்வம் செய்திருந்தார். அலங்கார பந்தல் நுழைவாயில், திமுக கொடி, தோரணம் எனப் பட்டுக்கோட்டை நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது.
இதன் ஒரு பகுதியாக பல கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையோரத்தில் பத்துக்குப் பத்து அளவில் ஸ்டாண்டிங் ப்ளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். இதனை கட்சியினர் தட்டி என்பார்கள்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சாலையோரத்தில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் போட்டோவுடன் வரவேற்று வைக்கப்பட்ட தட்டியை அகற்றி வெளியே தெரியாமல் திருப்பி போடப்பட்டது.
”நாளைதான் திருமணம் (நேற்று) ஏன் அதற்குள் தட்டியை அகற்றுகிறார்கள்” என்பது தெரியாமல் கட்சியினர் குழப்பமடைந்தனர். இந்தச் சம்பவம் பட்டுக்கோட்டை முழுக்க பேசுபொருளாயிற்று.
இது குறித்து சிலரிடம் பேசினோம். ”பழஞ்சூர் செல்வம் மகன் திருமணத்தில் துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மறைந்த முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோருக்கு பெரிய கட்அவுட் வைத்து சிறப்பான ஏற்பாட்டைச் செய்திருந்தார் பழஞ்சூர் செல்வம்.
இதே போல் அமைச்சர்களை வரவேற்று அமைச்சர்கள் போட்டோவுடன் ஸ்டாண்டிங் தட்டி வைத்திருந்தார். பல கிலோ மீட்டர் தூரத்திற்குக் கிட்டத்தட்ட 400 தட்டிகள் வைத்திருந்தாகச் சொல்கிறார்கள்.

ஒரு தரப்பு இந்தத் தட்டியில் அமைச்சர்கள் போட்டோ பெரிதாகவும் ஸ்டாலின், உதயநிதி ஆகியோரின் படத்தைச் சிறிதாகவும் இருந்ததாகச் சொல்கிறார்கள். பழஞ்சூர் செல்வத்தின் பிரமாண்டமான இந்த ஏற்பாட்டைப் பொறுக்க முடியாத காழ்ப்புணர்ச்சி அடைந்தவர்கள் இது குறித்து உதயநிதி உதவியாளர் மூலம் உதயநிதிக்குத் தெரியப்படுத்தி உள்ளனர்.
உடனே அவர் உதவியாளரிடம் தட்டியை அகற்றச் சொல்லிடுங்கள் எனச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து அமைச்சர் கே.என்.நேருவுக்கு போன் செய்த உதவியாளர் விவரத்தைக் கூறியிருக்கிறார்.
பின்னர், பழஞ்சூர் செல்வத்திற்கு போன் செய்த நேரு, எல்லாத் தட்டிகளையும் எடுத்து விடுயானு சொல்ல உடனே அந்தப் பணியில் பழஞ்சூர் செல்வம் தரப்பு ஈடுபட்டது. தட்டியைக் கழற்றி அதே இடத்தில் அப்படியே தட்டி தெரியாத வகையில் தலைகுப்புற பழஞ்சூர் செல்வம் தரப்பு போட்டு விட்டனர்.
இதையடுத்து அகற்றிய தட்டிகளை நேற்றுதான் வாகனத்தில் எடுத்து சென்றனர். பழஞ்சூர் செல்வத்தின் விமரிசையான இந்த ஏற்பாடு தேர்தல் சமயம் என்பதால் விமர்சனத்திற்கு உள்ளாகும் எனச் சிலர் சொன்னதாகவும், அதனால் உதயநிதி எடுக்க சொன்னார் என்றும் பட்டுக்கோட்டை திமுக-வில் சிலர் சொல்கிறார்கள்.

பழஞ்சூர் செல்வம் கட்சிக்குச் செலவு செய்வதற்குத் தயங்காதவர் அவரது இந்த ஏற்பாடு முக்கிய நிர்வாகிகள் பலருக்கு எரிச்சலைத் தந்துள்ளது. உடனே அவர்கள்தான் இதைத் திரித்துச் சொல்லி எடுக்க வைத்து விட்டனர் என்றும் கட்சியினர் மத்தியில் இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
இதை பழஞ்சூர் செல்வம் தரப்பு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எதனால் மேலிடத்தில் இருந்து தட்டியை எடுக்கச் சொன்னார்கள் என்கிற காரணமும் அவருக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தச் சம்பவத்தால் பழஞ்சூர் செல்வம் அப்செட் ஆகிவிட்டார்” என்றனர்.




