தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக தலைவர் விஜய் பற்றி விமர்சிக்கும்போது, நடிகை பற்றி பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்கள். பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களும்கூட தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை சம்பந்தப்பட்ட நடிகை தன் வழக்கறிஞர் மூலம் வெளியிட்ட அறிக்கையில், “எனக்கு தொடர்பில்லாத விஷயங்களில் எனது பெயரை பயன்படுத்தக் கூடாது. பொதுவெளியில் தனிப்பட்ட கருத்துக்களை பேசவோ தனிப்பட்ட வாழ்க்கையை விவாதப் பொருளாக்கவோ வேண்டாம்” எனத் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “என்னுடைய அரசியல் வாழ்க்கையைப் பொறுத்தவரை எந்த ஒரு தனிநபர் விமர்சனத்தையும் நான் அனுமதிப்பதில்லை… பேசியதுமில்லை. அன்றைக்கு தவறுதலாக ஒரு வார்த்தை வந்துவிட்டது. அது குறித்து வானதி சீனிவாசன் ஏற்கெனவே என்னிடம் பேசி இருந்தார்.
நேற்றுகூட முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டுக்குச் சென்றபோது, அவரும் குறித்து இது குறித்து என்னிடம் பேசினார். எனவே, உண்மையிலேயே யாரேனும் இதில் வருத்தப்பட்டிருந்தால் என்னுடைய வருத்தத்தை, மனப்பூர்வமாகத் தெரிவித்து கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.




