15
March, 2025

A News 365Times Venture

15
Saturday
March, 2025

A News 365Times Venture

தொகுதி மறுவரையறை: `தெற்கு தேய்கிறது; வடக்கு மேய்கிறது’ – ஆதவன் தீட்சண்யா | களம் பகுதி 4

Date:

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’

இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது Delimitation – `தொகுதி மறுவரையறை’ விவகாரம். பல்துறைகளை சார்ந்த பல்வேறு ஆளுமைகள் தினம் ஒருவர் என அது குறித்து விரிவாக தங்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளார்கள்.

எழுத்து : ஆதவன் தீட்சண்யா

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்)

ஒன்றிய பாஜக அரசின் எந்தவொரு முடிவும் செயலும் நாட்டின் வளர்ச்சிக்கும் ஜனநாயகத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரானதாக மட்டுமன்றி, அந்தக் கட்சியின் ஆதாயங்களுக்காக பெருமளவு முறைகேடானதாகவும் இருக்கும் என்பதற்கு பெரிய ஆய்வுகள் தேவையில்லை.

அது கடந்தகாலத்தில் கொண்டுவந்த நீட், பணமதிப்பிழப்பு, தேர்தல் பத்திரம், குடியுரிமைத் திருத்தச்சட்டம், வேளாண் திருத்தச்சட்டம், தொழிலுறவுச் சட்டம், அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கம், ஜி.எஸ்.டி, தேசிய கல்விக்கொள்கை, இந்திய குற்றவியல் சட்டத்திருத்தம் என ஏராளமான சான்றுகள் அதற்குப் போதுமானதாக உள்ளன.

அந்த அனுபவத்திலிருந்தே, அதாவது நாட்டுக்கு நன்மைபயக்கும் எதுவொன்றையும் பாஜக செய்துவிடாது என்கிற பட்டறிவிலிருந்தே – அது செயல்படுத்த முனையும் “தொகுதி மறுவரையறை” என்பதை எடுத்தயெடுப்பில் நாட்டுநலனுக்கு எதிரானது என்று சொல்லிவிட முடியும்தான். ஆனால் அதற்கும் அப்பால் சென்று தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது.

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா

தொகுதி எல்லை வரையறுப்பும் தேர்தலும்தான் நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தாங்கும் இரட்டைத்தூண்கள் என்று போற்றப்படுவதன் பொருள், தொகுதி வரையறுப்பின் பேரில் நடைபெறும் தேர்தலே, மக்களின் சரியான பிரதிநிதித்துவமாக இருக்கமுடியும் என்பதாகும்.

சட்டமன்றத்திற்கோ நாடாளுமன்றத்திற்கோ செல்லும் ஒவ்வொரு பிரதிநிதியும் சமமான மக்கள்தொகை கொண்ட தொகுதியின் பிரதிநிதியாகச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போதே ஒவ்வொருவரது வாக்கும் சமமதிப்புடையதாகிறது என்பதை கணக்கில்கொண்டே ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்தபிறகும் அதனடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையையும் எல்லையையும் மறுவரையறை செய்வதுடன், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான தொகுதிகளை அடையாளப்படுத்தவும் வேண்டும் என்று பணிக்கிறது அரசியல் சாசனம்.

மக்கள் தொகை அடைப்படையில்..!

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதற்கு முன்னோட்டமாக, 1952ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதல் எல்லை நிர்ணய ஆணையம், 1951 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 494 என வரையறுத்தது.

1963ஆம் ஆண்டு இரண்டாவது ஆணையம், 1961 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, தொகுதிகளின் எண்ணிக்கையை 522 ஆக உயர்த்தியது. 1973ஆம் ஆண்டில் மூன்றாவது ஆணையம் இந்த எண்ணிக்கையை 543 என உயர்த்தியது. இதனிடையே 1952ஆம் ஆண்டு முதல் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் மக்கள்தொகை கட்டுப்பாட்டு விகிதம் சமநிலையில் இல்லாததை பரிசீலித்த இந்திரா காந்தி அரசாங்கம், அடுத்த 25ஆண்டுகளில் சமநிலையை எட்டவேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து, 2001 மக்கள்தொகை கணக்கெடுப்புவரை மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுவரையறையை (42ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்,1976 மூலம்) நிறுத்திவைத்தது.

இந்திரா காந்தி

1976 – 2000 வரையான 25 ஆண்டுகளில் தமிழ்நாடு, கேரளா ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்கள் மக்கள்தொகைப் பெருக்கத்தை பெருமளவு கட்டுப்படுத்தயிருந்தன. ஆனால் வடமாநிலங்களிலோ எதிர்மாறான நிலை. மக்கள்தொகைப் பெருக்க விகிதம் இவ்வாறு தொடர்ந்து சமநிலையில் இல்லாத சூழலில், 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தங்களது தொகுதிகள் குறையும் ஆபத்து இருப்பதை நன்குணர்ந்த தென்மாநிலங்கள், தொகுதி மறுவரையறை ஆணையம் (2002) அமைக்கப்படுவதற்கே கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனால் வேறு வழியின்றி, தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல் எல்லைகளை மட்டும் சீரமைப்பதாக அந்த ஆணையத்தின் பணியை மட்டுப்படுத்திய அப்போதைய வாஜ்பாய் அரசு (84ஆவது அரசியல் சட்டத்திருத்தம், 2002 மூலமாக) மேலும் 25ஆண்டுகளுக்கு அதாவது 2026ஆம் ஆண்டுவரை தொகுதி மறுவரையறை செய்வதை நிறுத்திவைத்தது. அதனால், நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையும் விகிதாச்சாரமும் மாற்றமின்றி தொடர்கின்றன.

கொரோனாவை காரணம் காட்டி..!

2026ஆம் ஆண்டில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டுமாயின், அது 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நடக்கவேண்டும். ஆனால், மோடியின் ஒன்றிய அரசோ கொரானா பொதுமுடக்கத்தைக் காரணங்காட்டி 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் முடக்கிவிட்டது. பிறப்பு – இறப்பு விகிதத்திற்கிடையேயான வேறுபாட்டை வைத்து கொரானாவினால் செத்தவர்கள் எவ்வளவு பேர் என்கிற உண்மை விவரம் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதனாலேயே கணக்கெடுப்பை முடக்கியிருக்கலாம் என்றொரு குற்றச்சாட்டும் நிலவுகிறது.

மக்கள் தொகை

அமெரிக்கா, பிரிட்டன்… அவ்வளவு ஏன் கொரானாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சீனா கூட மக்கள்தொகை கணக்கெடுப்பை இதேகாலத்தில் தடையின்றி நடத்திவிட்ட நிலையில் உலகத்துக்கே வழிகாட்டும் விஸ்வகுரு மோடியின் அரசு ஏன் நடத்தவில்லை? இதே பொதுமுடக்கக் காலத்தின் கெடுபிடிகளைத் தளர்த்தி பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களை நடத்திமுடித்த மோடி அரசு, பொதுமுடக்கம் முடிந்த பிறகாவது மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியிருக்கலாமே? அவ்வாறெல்லாம் செய்யாமல் இப்போது 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யலாம் என்கிறது. இதிலென்ன பிரச்னை?

பிரிட்டிஷ் காலனியாட்சி முதன்முதலில்…

ஒரு நாட்டை நிர்வகிக்கவும் மக்கள்தொகை பரவலாக்கம், வசிப்பிடம், கல்வி, மருத்துவம், உற்பத்தி, விநியோகம் சார்ந்த திட்டமிடுதலுக்காகவும் அந்நாட்டின் மக்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் அரசிடம் இருக்கவேண்டும் என்கிற கண்ணோட்டம் சேமநல அரசுகள் உருவான காலந்தொட்டே உலகெங்கும் இருந்துவருகிறது.

“பொருளாதார, சமூகப் பிரச்னைகளை திறமையாக கையாண்டு தீர்வு காண்பதற்கும், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பயனுள்ள விதமாக அரசை நடத்திச் செல்வதற்கும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும். அந்தச் சான்றுகளைத் திரட்டித்தரும் அறிவியல்பூர்வமான நடவடிக்கையே மக்கள்தொகை கணக்கெடுப்பு” என்கிறது ஐநா மன்றம்.

பிரதமர் மோடி – புதிய நாடாளுமன்றம்

இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாட்சி முதன்முதலில் 1872ஆம் ஆண்டு வெளியிட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரம் சுமார் ஆறாண்டுகாலம் திரட்டிய தகவல்களின் தொகுப்பாகும். அப்போதிருந்து 2011ஆம் ஆண்டு வரை பத்தாண்டுகளுக்கொரு முறை என இதுவரை 15 முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்துள்ளது. இரண்டாம் உலகப்போர், இந்திய – சீன எல்லை மோதல், வங்கதேச விடுதலைப்போர் ஆகியவற்றினால் இடையூறுகள் ஏற்பட்ட நிலையிலும்கூட 1941, 1961, 1971 ஆம் ஆண்டுகளில் கணக்கெடுப்பு தடைபடாமல் நடந்துள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பின் இணை இயக்குநராக பணியாற்றிய A.W.மகாத்மே, “இந்தக் கணக்கெடுப்புகள் நகர்ப்புற கிராமப்புற பாகுபாடுகள், பாலினம், வயது, திருமணநிலை, மதம், மொழி, கல்வியறிவு, கல்விநிலை, தொழில், இடப்பெயர்வு, வீட்டு நிலைமைகள் போன்றவை பற்றிய தகவல்களைச் சேகரித்துள்ளன. 1872 முதல் 1931 வரை, மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு நபரிடமும் அவர் ஏதேனும் உடல் அல்லது மனக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று விசாரித்திருக்கிறது. 1941 முதல் 1971 வரை, இந்தக்கேள்வி மக்கள்தொகை கணக்கெடுப்பு வினாத்தாளிலிருந்து முற்றிலும் விலக்கப்பட்டது.

National Democratic Alliance அரசு அல்ல… No Data Alliance அரசு

1981 மக்கள்தொகை கணக்கெடுப்பில், இக்கேள்வியை குறிப்பிட்டளவில் விசாரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வீடுகளைப் பட்டியலிடும் கட்டத்தில், ஒரு வீட்டில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர், உறுப்பினர்களில் யாராவது முற்றிலும் பார்வையற்றவர்களா, அல்லது முற்றிலும் ஊனமுற்றவர்களா, அப்படியானால் எத்தனை பேர் என்று கூடுதல் கேள்வி கேட்கப்பட்டது” என்கிறார்.

இவற்றுக்கும் அப்பால், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் இட ஒதுக்கீட்டு வரம்பை உயர்த்தவும், தொகுதி மறுவரையறைக்கும், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை இப்போதேனும் வழங்குவதற்காகவும் 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு தேவை. ஆனால் அப்படியான அறிவியல்பூர்வமான தரவுகள் எதுவும் மோடி அரசுக்குத் தேவைப்படவில்லை.

புலம்பெயர் தொழிலாளர்கள்

“புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றியோ, விவசாயிகள் தற்கொலை பற்றியோ, கோவிட் இறப்புகள் பற்றியோ, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்தோ எந்தவொரு சரியான தரவையும் தராத இந்த National Democratic Alliance அரசை No Data Alliance அரசு என்றழைப்பதே பொருத்தமாக இருக்கும்” என்று எதிர்கட்சிகளின் கேலிக்கு ஆளாகியிருந்தது மோடி அரசு.

உண்மையில் அரசிடம் தரவுகள் இல்லாமலில்லை. தரவுகளிலிருந்து தெரியவரும் உண்மைகள் அரசின் தவறான கொள்கைகளை அம்பலப்படுத்துவதாக இருந்ததால் திட்டமிட்டே அவற்றை மறைத்தும் திரித்தும் முறைகேடுகள் செய்வதற்கு உகந்தளவில் வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதே அணுகுமுறைதான் மக்கள்தொகை பற்றி எந்த மேம்படுத்தப்பட்ட தரவுகளையும் வெளியிடாமல் 2011 கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யலாம் என்கிறது.

சமனற்ற இந்நிலைக்கு எதிராக…

மக்கள்தொகைப் பெருக்கம், பிறப்பு – இறப்பு விகிதம், சராசரி வாழ்நாள், மக்கள்தொகை அடர்த்தி, பரவலாக்கம், வீட்டுடமை, இடப்பெயர்வு உள்ளிட்ட தரவுகளில் 2001ஆம் ஆண்டு நிலவிய சமமற்ற நிலை 2011ஆம் ஆண்டில் பெரிதாக மாறியிருக்க வாய்ப்பில்லாதபோது, 2001 கணக்கெடுப்பை தொகுதி மறுவரையறைக்கு அடிப்படையாக கொள்ளக்கூடாது என்கிற தென்மாநிங்களின் நிலைப்பாடு 2011 கணக்கெடுப்புக்கும் பொருந்தும்.

மறுவரையறையினால் நாடாளுமன்றத்தொகுதிகளின் எண்ணிக்கை ஒருவேளை மாற்றியமைக்கப்படவில்லை என்றால் மக்கள்தொகை அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 9 தொகுதிகள் குறையும். அதாவது நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7% என்ற நிலையிலிருந்து 5.5% என குறையும். ஒருவேளை மக்கள்தொகைப்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 753 என மாற்றியமைக்கப்படுமானால் தமிழ்நாட்டிற்குரிய தொகுதிகள் 41 என்றாகும். இது முந்தைய இடங்களைவிட இரண்டு இடங்கள் கூடுதல் என்றாலும் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் தற்போதுள்ள 7% என்பதிலிருந்து 5.4% என்கிற நிலைக்குச் சரியும்.

நாடாளுமன்றம்!

தமிழ்நாட்டைப் போலவே கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிஸா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கும் இதேகதிதான். ஆனால் மேற்சொன்ன இரண்டு விதங்களில் எதுவொன்றின்படி மறுவரையறை செய்தாலும் உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் போன்ற வடமாநிலங்கள் கூடுதலான இடங்களையும் பிரதிநிதித்துவ விகிதாச்சாரத்தையும் பெறுகின்றன. சமனற்ற இந்நிலைக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் எழுப்பும் கேள்விகளுக்கு ஒன்றிய ஆட்சியாளர்களும் பாஜகவினரும் முன்னுக்குப்பின் முரணாக குயுக்தியுடன் பதிலளித்து குழப்பிவருகின்றனர்.

மக்கள்தொகையில் மட்டுமன்றி மனிதவள மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் மாநிலங்களின் பங்களிப்பையும் உள்ளடக்கி பிரதிநிதித்துவம் வழங்குவது பற்றியெல்லாம் வெளியாகும் முன்வைப்புகளை மோடியின் ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ளவில்லை. கூடுதல் இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை முன்கூட்டியே கட்டிவிட்டதன் மூலம், உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து மாநிலங்களுக்கிடையே சமனற்ற நிலையை உருவாக்கி மோதவிடுவதில் தான் அது அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

கூட்டாட்சி, நாடாளுமன்ற ஜனநாயகம், நாட்டின் பன்மைத்துவம், குடிமக்களுக்கிடையே சமமதிப்பு, சமூகநீதி ஆகியவற்றில் அக்கறையுள்ளவர்கள் பிரதிநிதித்துவத்தில் சமத்துவம் என்கிற நிலையை உருவாக்கும் விதமாக தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டுமென ஒன்றிய அரசை நோக்கி குரலெழுப்புவது அவசியம்.!

நாளை: களம் 5 – `நாங்கள் கேட்கக்கூடிய கேள்வி இது தான்..!’ – செந்தில் குமார், திமுக

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

PM SHRI: பி.எம் ஸ்ரீ திட்டம் என்றால் என்ன? மத்திய Vs மாநில அரசு… அரசியல் செய்வது யார்? | Explainer

Tபி.எம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கும், மாநில திமுக...

Russia – Ukraine War: “போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தான்; ஆனால்..'' – புதின் கேட்கும் 3 கேள்விகள்!

இந்த வாரம், சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்க - உக்ரைன் பேச்சுவார்த்தையில்...

Pawan Kalyan: `ஏன் தமிழ் படங்கள் இந்தியில் டப் செய்கிறார்கள்?' – சர்ச்சையைக் கிளப்பும் பவன் கல்யாண்

தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தி திணிப்பு விவகாரம் குறித்து...