இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் சி.மகேந்திரன் நேற்று தவெகவில் இணைந்தார். இணைப்பிற்குப் பிறகு, “சிவப்பு துண்டுடனேயே இந்த இயக்கத்தில் பயணிக்கிறேன்” என்று பேசியிருந்தார்.
தவெகவில் சி.மகேந்திரன் இணைந்தது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…
“இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த உறுப்பினராக இருந்து வந்த சி.மகேந்திரன் கட்சி அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகித்தவர்.
சமீபகாலமாக கட்சியின் அமைப்பு விதிகளுக்கு விரோதமாகவும், கட்சியின் கோட்பாட்டு நெறிமுறைகளுக்கு எதிராகவும் செயல்பட்டதால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார்.
குறிப்பாக,கட்சியின் ஆரம்பகால தலைவர்களால் உருவாக்கப்பட்ட, இன்று தமிழ்நாட்டில் மிகச்சிறந்த மதிப்புமிக்க பதிப்பகமாக வளர்ந்துள்ள நிறுவனத்தை குறுக்கு வழியில் சிலர் கையகப்படுத்துவதற்கு மோசடியான ஆவணங்களை தயார் செய்திருந்திருந்தனர்.
அத்தகைய மோசடி பேர் வழிகளுக்கு ஆதரவாக சி.மகேந்திரன் செயல்பட்டார். எனவே, சி.மகேந்திரன் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அவரும் கட்சியுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்தார்.
சி.மகேந்திரன் தனது தவறுகளை கலைந்து கொண்டு கட்சியுடன் தன்னை பொருத்திக் கொள்ள கட்சி கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தற்போது அவர், தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்துவிட்டார்.
சி.மகேந்திரனின் இந்த நடவடிக்கையின் மூலம் அவர் மீது கட்சி எடுத்த நடவடிக்கை மிகச் சரியானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரியப்படுத்திக் கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




