கோவை விமான நிலையத்தில் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “தென்மேற்கு பருவ மழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருவமழை குறித்து எந்த அச்சமும் தேவையில்லை. வயநாடு போல தமிழகத்தில் எதிர்காலத்தில் நடக்காத அளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
காலையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என ஒவ்வொரு துறையையும் முதல்வர் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டார். எங்கெங்கு முறைகேடுகள் நடைபெறுகின்றன என்பதை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தால் உங்கள் மூலமாக நடவடிக்கையை துறை எடுக்கும்.
செந்தில் பாலாஜி கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. பொறுப்பற்றவர்கள் என்று சொல்வதற்கு அவருக்கு தகுதி இல்லை. செந்தில் பாலாஜி ஏன் தொடர்ந்து அமைச்சராக இருக்க முடியவில்லை என்பதை அவரிடம் கேட்க வேண்டும். அவர் அமைச்சரவையில் இடம் பெற முடியாமல் போனதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பில் என்ன சொல்லி இருக்கின்றது என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.
பொதுவாக ஒவ்வொருவரும் ஒரு கட்சியின் கொள்கை லட்சியங்கள் எனத் தனித்தனியாக இருக்கின்றன. திமுக எடுக்கிற முடிவுகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது.
மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம். அதற்கான பணிகளை முதல்வர் மேற்கொள்வார். 20 நாள்களில் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்தது, உங்கள் வீட்டில் என்ன பிரச்னை வந்தது, ஆறு மாத காலத்திற்கு இந்த அரசு தன்னிச்சையாகச் செயல்பட வேண்டும். அதன் பிறகுதான் கேள்வி கேட்போம் என்று சொன்னார்கள்” என்றார்.
ஆட்சிக்கு வந்தவுடன் கேள்வி கேட்கக்கூடாது என மிரட்டுகின்றீர்களா என்ற கேள்விக்கு, “இந்த மாதிரி எல்லாம் கேட்கக்கூடாது. யாரையும் மிரட்டவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னையில் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறோம். சூலூர் பகுதியில் நடந்த குற்றத்திற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொத்தம் பொதுவாக சொல்லக்கூடாது நாங்கள் மிரட்டும் தொனி எங்களிடம் கிடையாது. நாங்கள் சாப்ட் நேச்சர். எங்கள் தொனி எதுவும் மாறவில்லை. முதல்வர் படிப்படியாகச் செய்து கொண்டு இருக்கின்றார். அதற்கு ஒரு டைம் கொடுக்க வேண்டும். கேள்வி கேட்பது சுலபம் பதில் சொல்வதற்கு என்னைப் போன்றவர்களுக்கு இருக்கும் கஷ்டங்களை உணர வேண்டும்” எனப் பதிலளித்தார்.
அண்ணாமலை கட்சி ஆரம்பித்து இருப்பது குறித்த கேள்விக்கு, “ஒவ்வொருவரும் இயக்கத்தைத் துவங்குவது ஜனநாயக உரிமை, அவர் அந்த உரிமையை நிலைநாட்டி இருக்கிறார். அவருக்கு இருக்கும் வேதனை என்ன என்பதைப் பார்க்க வேண்டும். பா.ஜ.க-வில் இருந்து வந்திருக்கிறார் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” எனப் பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “எங்களைப் பொறுத்தவரையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது, எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விஷயம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தால் மட்டும்தான் இலக்கை அடைய முடியும்” என்றார்.
இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு அழைப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, “கூட்டணி மந்திரி சபை தற்போதுதான் உருவாகி இருக்கிறது. அதில் என்ன வாக்குறுதிகளைக் கொடுத்தோமோ, அதை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றோம். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ஐயூஎம்எல் இடம்பெற்று இருக்கின்றனர். எங்களைப் பொறுத்தவரையில் திறந்த மனதுடன் இருக்கிறோம்.
நாங்களே இதற்கெல்லாம் பதில் சொல்வதைக் காட்டிலும் எங்களது கூட்டணியில் இருப்பவர்கள் நேரடியாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” எனப் பதிலளித்தார்.
தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, “அப்படி இல்லை, டிவிட்டரில் வந்தது வேறு. அந்த மாதிரி எந்தப் பெயரும் வைக்கவில்லை” எனப் பதிலளித்தார்.




