கேரள மாநிலம் காசர்கோடு, மஞ்சேஸ்வரம் மற்றும் கும்பளா ஆகிய கல்வித் துணை மண்டலங்களில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக கல்வித் துறை சார்பில் சுதந்திர தின விழா வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன.
அதில், பிரிட்டிஷாரிடம் இருந்து அதிகபட்ச தண்டனையைப் பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் யார்? என்ற கேள்விக்கான விடைக்குறிப்பில் வி.டி.சவர்க்கர் என்று கொடுக்கப்பட்டிருந்தது. இது வரலாற்று உண்மைகளுக்கு முற்றிலும் புறம்பானது மற்றும் சவர்க்கரைப் புகழும் நோக்கம் கொண்டது என சி.பி.எம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பி.ஏ.முஹமது ரியாஸ் கூறுகையில், “வரலாற்றைத் திரிக்கவும், கல்வியை மதமயமாக்கவும் மதச்சார்பற்ற கேரளா ஒருபோதும் அனுமதிக்காது. கேரளாவின் மதச்சார்பற்ற கல்விப் பாரம்பர்யத்தை உடைக்க முயலும் எந்தவொரு முயற்சியையும் அனுமதிக்கக் கூடாது.
இது வெறும் ஒரு வினாடி-வினா கேள்வியின் பிரச்னை மட்டுமல்ல, குழந்தைகளுக்கு வழங்கப்படும் வரலாறு யாருடைய பார்வையில் கற்பிக்கப்படுகிறது என்ற முக்கியமான அரசியல் கேள்வியாகும். சங்பரிவாரின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அரசு நிர்வாகம் வழியமைத்துக் கொடுக்கக் கூடாது” என்றார்.
இந்த வினாடி-வினா போட்டிக்கான கேள்விகள், குறிப்பிட்ட மூன்று துணை மண்டலங்களின் சமூக அறிவியல் மன்ற அசோசியேஷன் பொறுப்பாசிரியர்களால் தயாரிக்கப்பட்டவை எனவும், வினாத்தாள் தயாரிப்பைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடனேயே இக்கேள்வி இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என கேரள கல்வி அமைச்சர் ஷம்சுதீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கல்வி அமைச்சர் ஷம்சுதீன் கூறுகையில், “அந்த வினாடிவினா நிகழ்ச்சிக்கும் கல்வித்துறைக்கும் சம்பந்தம் இல்லை. சுதந்திர தின விழா வினாடி-வினா போட்டி கல்வித்துறை காலண்டரில் குறிப்பிடப்படவில்லை.
அது உள்ளூர் அளவில் அமைக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும். அதில் பிழையான கேள்வி இடம்பெற்றுள்ளது. அந்நிய ஆட்சியின் கொடுமைகளைச் சந்தித்த மாமனிதர்கள் பலர் உள்ளனர்.

இது தொடர்பாக கல்வித் துறை பொது இயக்குநரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். கேள்வி தயாரித்த ஆசிரியரின் தரப்பில் சில குறிப்பிட்ட அஜெண்டாக்களை அமல்படுத்தும் முயற்சி நடந்துள்ளது.
தனிப்பட்ட நபர்களின் அஜெண்டாக்களைச் செயல்படுத்துவதற்கான இடம் கல்வித் துறை அல்ல. வந்தே பாரதம் பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்ற உத்தரவின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்றார்.




