தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகும் அக்கட்சியின் வேட்பாளர்களை இன்று அறிவித்திருக்கிறார்.
234 தொகுதிகளில் தனித்து களம் காண்கிறது தவெக. பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் விஜய்.
அவர் வேட்பாளர்கள் அறிவித்ததைப் பற்றியும், அவர் திமுக கூட்டணியை விமர்சிப்பது பற்றியும் நடிகரும், முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான கருணாஸ் செய்தியாளர்களிடையே பேசியிருக்கிறார்.
கருணாஸ் பேசுகையில், “இந்தக் கூட்டணியை விமர்சிப்பதற்கு ஒரு தகுதி வேண்டும். கட்சியின் தலைவராகக் குறிப்பிட்ட வாக்குகளைத் திட்டமிட்டு அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
அவருடைய பெயரை ஜோசப் விஜய் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், அவரை விஜய் என்றுதான் நமக்கு தெரியும். இன்றுதான் அவர் ஜோசப் விஜய் எனச் சொல்லியிருக்கிறார்.
ஆனால், சில காலத்திற்கு முன்பு அவருடைய தந்தையார் எஸ்.ஏ. சந்திரசேகர் தாய் மதத்திற்குத் திரும்பிவிட்டதாகச் சொல்லியிருந்தார். அப்போது இவர் என்ன என்கிற கேள்வியும் இருக்கிறது. இன்னும் ஆழமாக இதற்குள் செல்லலாம்.
ஆனால், நீங்கள் ஒரு கட்சியின் தலைவர். அதன் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். சிறுபான்மையினர் வாக்குகளை அவ்வளவு எளிதாகக் கவர முடியாது.

ஆனால், மக்களுக்காக தவெக குரல் கொடுத்திருக்க வேண்டும். இன்று கிறிஸ்துவர் என அடையாளப்படுத்திக் கொள்ளும் அவர், இத்தனை ஆண்டுகளில் அந்த மக்களோடு சேர்ந்து கிறிஸ்துமஸ் நிகழ்வு நடத்தியிருக்கிறாரா?
மக்களோடு மக்களாக நின்று போராடக் கூடியவர்களுக்குத்தான் மக்கள் அங்கீகாரம் கொடுப்பார்கள். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி தொடரும். இதற்கு முக்குலத்தோர் புலிப்படை உறுதுணையாக இருக்கும்.
நிச்சயமாக, மக்கள் அவர்களுக்குப் பிடித்த சிலருக்கு வாக்களிக்கத்தான் செய்வார்கள். அவர்களுடைய சாதி, மத பின்புலம் வைத்துதான் வாக்களிக்கிறார்கள். இதனால் மதசார்பற்றக் கூட்டணியின் வாக்கு பாதிக்கப்படாது என்பதை உறுதியாக கூறுகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.




