திமுக கூட்டணியில் தங்களுக்கு 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் சிபிஎம் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பெ.சண்முகம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியப் பிறகு செய்தியாளர்களைச் சந்திருக்கிறார்.
“திமுகவின் பேச்சுவார்த்தை குழுவுடன் சிபிஎம் கட்சியின் சார்பில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினோம்.
“5 தொகுதிகளை நீங்கள் ஏற்க வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தொடர்வதற்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து சந்திப்பதற்கும் அது கட்டாயம் பயன்படும்.
ஆகவே நீங்கள் இந்த 5 என்கிற எண்ணிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று முதல்வர் எங்களிடம் கேட்டுக்கொண்டார். முதலமைச்சருடைய கருத்தை கட்சியினுடைய மாநில செயற்குழுவில் விவாதித்து அதனுடைய முடிவு என்ன என்பதை நாங்கள் உரிய முறையில் தலைவருக்கு செய்திகள் அனுப்புகிறோம் என்பதைச் சொல்லி இருக்கிறோம்.
மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்துதான் 2026 சட்டமன்றத் தேர்தலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சந்திக்கும். தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடாது என்ற போராட்டத்தை நாங்கள் நடத்துவது என்பது வேறு.
அதற்காக வேறுவிதமான முடிவுகள் எதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செல்லாது. எந்த நேரத்திலையும் அப்படிப்பட்ட ஒரு முடிவை நாங்கள் எடுக்க மாட்டோம். கூட்டணியை விட்டு செல்ல மாட்டோம்.

எங்கள் நிலைப்பாட்டில் குழப்பமெல்லாம் ஒன்றும் இல்லை. 6 தொகுதி பெற வேண்டும் என்பதே மாநிலக்குழுவினுடைய முடிவு. முதல்வர் கூப்பிட்டுப் பேசி ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிற நிலையில், அதைப் பற்றிப் பரிசீலிக்க வேண்டியது எங்களுடைய கடமை. நாங்க கட்டாயம் பரிசீலித்து முடிவைத் தெரிவிப்போம்” என்று கூறியிருக்கிறார்.




