தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேற்று ரஜினிகாந்த் குறித்து கருத்தொன்றை பேசியிருந்தார். அதாவது, “தமிழ்நாட்டில் `எம்.ஜி.ஆருக்குப் பிறகு பிரபலமான அரசியல் தலைவராக வர வேண்டும்’ என ரஜினிகாந்த் நினைத்தார். ஆனால், தி.மு.க குடும்பம் பல மிரட்டல்களைக் கொடுத்து அவரை அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக்கொண்டது. இன்றைக்கு `ரெட் ஜெயண்ட்’ பிக்சர்ஸில் ரஜினி நடிக்கப் போய்விட்டார். ரஜினியிடம் இல்லாத மன வலிமை நம் தலைவர் விஜய்யிடம் இருக்கிறது’’ என்று நேரடியாக சாடியிருந்தார்.
ஆதவ்வின் இந்த கருத்துக்கு ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளரான சோளிங்கர் என்.ரவி பதிலடி கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக, சோளிங்கர் ரவி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ரஜினிகாந்த் மிரட்டல்களுக்கு அஞ்சுபவர் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.
கொரோனா வைரஸ் தீவிரமாய் பரவிய நிலையில், அச்சமயம் கூட்டம் சேர்ப்பதினால் மக்களுக்கு ஏற்படும் தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கவும் அரசியலில் இருந்து அவர் விலகினார். மற்றவர்களின் மிரட்டல்களுக்கு அஞ்சி அல்ல.
தனது பலத்தை நிரூபிக்க தன்னை நம்பி வரும் உயிர்களை பலியிடும் அற்ப அரசியலை ரஜினி செய்யவில்லை. கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவன் ஆகிவிட முடியாது. தனது அரசியல் விலகல் எத்தனை விமர்சனங்களையும், பழிகளையும் உருவாக்கும் என்பதை அறிந்தும் அதனை தாங்கிக் கொண்டு மக்களின் நலனிற்கு முக்கியத்துவம் அளித்தார். அது தான் அவரின் மனவலிமை. அதனால்தான் அவர் நிரந்தர தலைவர். பிழைக்கவும் ரஜினி… பழிக்கவும் ரஜினி’’ என்று விஜய் குறித்து குறிப்பிட்டிருக்கிறார் சோளிங்கர் ரவி.




