தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பூரிலிருந்து தனது பிரசாரத்தை தொடங்குவதாக திட்டமிட்டிருந்தார். ஆனால், விஜய்யின் பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
காவல்துறை அனுமதி வழங்காததால் அதை காரணம் காட்டி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி மறுத்திருந்தார். இதைக் கண்டித்து விஜய்யும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், விஜய் பிரசாரத்துக்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என தேர்தல் அதிகாரி தரப்பிலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது.
விஜய்யின் அனுமதி கடிதத்திற்கு காவல்துறை வழங்கியிருக்கும் பதிலில், ‘மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ள பெரம்பூர் முல்லை நகர் சந்திப்பானது சென்னை மாநகர தேர்தல் நடத்தும் அலுவலரால் எஸ் எம் நகர் 82 ஆவது பிளாக் சந்திப்பு என குறிப்பிட்டு சிறிய அளவிலான தெருமுனைப் பிரசாரம் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் மனுவில் மேற்படி முல்லை நகர் சந்திப்பில் தெருமுனை பிரசாரம் நடத்துவதற்கு பங்கு பெறுவோர்களின் எண்ணிக்கை 3000 என குறிப்பிடப்பட்டுள்ளதால் அனுமதி வழங்க பரிந்துரை செய்ய இயலாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே மனுதாரர் தங்களது பிரசாரம் நடத்த வேறு ஒரு இடத்தினை தேர்வு செய்து மனு அளித்தால் அனுமதி அளிப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’ எனக் கூறப்படுகிறது. இதை காரணம் காட்டிதான் தேர்தல் அலுவலர் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.




