மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலுக்காக பாக முகவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, ‘தவெக எப்படி வென்றது என 75 வருட கட்சி இன்னமும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறது. மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு பிறகு வெளியேவே வரவில்லை. கல்யாண வீடுகளில் மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார். உதய்யை நான்காம் கலைஞர், சேகுவாரா, சின்னவர் என்கிறார்கள். கலைஞர் மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், அவரின் திறமைக்கு உதயநிதி ஒப்பாவாரா?
அப்படி சொல்வதற்கு அருகதை வேண்டாமா? மு.க.ஸ்டாலினின் மகனாக நேராக வரக்கூடாது. நம்மை மாதிரி உழைத்து மேலே வர வேண்டும். எதிரி யாரென்றே தெரியாமல் பிரசாரம் செய்தார்களாம். தேர்தலில் எதிரி யார் என்று கூட கண்டடைய முடியாத கட்சிதான் திமுக.
வெறும் இன்ஸ்டாகிராமை வைத்தே உங்களை எங்கள் தலைவர் முடித்துவிட்டார். தலைவரை நீங்கள் முறையாக பிரசாரம் கூட செய்ய விடவில்லையே.

திமுகவில் எம்.எல்.ஏ,மாவட்டச் செயலாளர் ஆக வேண்டுமெனில் அந்த குடும்பத்துக்கு 12% கட்டிங் கொடுக்க வேண்டும். எங்களுடைய மாவட்டச் செயலாளர்களும் எம்.எல்.ஏக்களும் மக்களோடு மக்களாக இருக்கிறார்கள்.
திருவண்ணாமலை என்றாலே எ.வ.வேலுவாம்…அவர் என்ன பெரிய காந்தியா? ஒரு ஓட்டுக்கு 5000 கொடுக்க வேண்டும். எங்கெல்லாம் கொடுக்கலாம் என்பதுதான் இவர்களின் அரசியல்.
தேர்தலுக்கு முன்பாக மாபெரும் தியாகி செந்தில் பாலாஜியை தூக்கி கொண்டாடினார்கள். இப்போது அவரை கண்டுகொள்வதே இல்லை.
இடைத்தேர்தலில் மக்களுக்கு காசு கொடுக்கவே மாட்டோம், எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
மதுராந்தகத்தில் வெற்றி நமக்கே’ என்றார்.




