சட்டமன்றத் தேர்தல் முடிந்த தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளாவிலேயே இன்னும் பரபரப்பு ஓயவில்லை. அதற்குள் இன்னொரு தென் மாநிலமான கர்நாடகாவில் அரசியல் பரபரப்புகள் நடந்தேறி வருகின்றன.
இரண்டு வாரங்களாக ஓடிக்கொண்டிருந்த பேச்சுகள் நேற்று முன்தினம் (மே 28) காட்சிகளாக அரங்கேறின.
மே 28-ம் தேதி காலையில் சித்தராமையா வீட்டில் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விருந்தில் கலந்துகொண்டவர்கள் முன், தன்னுடைய ராஜினாமா முடிவை வெளிப்படையாக அறிவித்தார் சித்தராமையா.
டி.கே.சிவக்குமார்
இவர் ராஜினாமா செய்துவிட்டால், ‘அடுத்த கர்நாடகா முதல்வர் யார்?’ என்கிற கேள்விக்கு இடமே இல்லை. அதற்கான ரெடி- மேட் பதில் தான், ‘டி.கே.சிவக்குமார்’. கர்நாடகாவில் கடந்த மூன்று ஆண்டுகள் நடந்த காங்கிரஸ் ஆட்சியில் இவர் தான் துணை முதலமைச்சர்.
2023-ம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றதற்கே இவரது பங்கும், இவரது களப்பணிகளும் தான் முக்கிய காரணம்.
ஆக, சித்தராமையா ராஜினாமாவிற்குப் பின், அடுத்த முதல்வர் யார் என்பதற்கு அதிக போட்டியில்லாத பதில் சிவக்குமார்.
ஆனால், இப்போது சிவக்குமார் இருந்த துணை முதலமைச்சர் பதவிக்கு தான் கடும் போட்டி நிலவி வருகிறது.
ராகுல் காந்தியின் கண்டிஷன்
அடுத்த முதல்வர் ஆகப்போகும் டி.கே.சிவக்குமாருக்கு இரண்டு கண்டிஷன்களைச் சொல்லியிருக்கிறாராம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
ஒன்று, அமைச்சரவையில் 60 வயதிற்குக் கீழுள்ள இளம் முகங்கள் இருக்க வேண்டும். இன்னொன்று, சிறுபான்மையினருக்கும், பட்டியிலினத்தவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்பது தான் அது.
இந்தக் ‘கண்டிஷன் அப்ளை’ அமைச்சரவையில் மட்டுமல்லாமல், துணை முதலமைச்சர்களிலும் எட்டிப்பார்க்கும் என்று தெரிகிறது. ஆம்… கர்நாடகாவில் இரண்டு துணை அமைச்சர்கள் கொடுக்கப்படவிருக்கிறதாம்.
மல்லிகார்ஜுன கார்கேயின் காய் நகர்வு
அதில் ஒன்று பட்டியினத்தவர்களுக்கு என்று கூறப்படுகிறது. இந்த ஒரு சீட்டிற்காக இரண்டு பேர் ரேஸில் இருக்கிறார்கள். ஒன்று முன்னாள் துணை முதலமைச்சர் பரமேஸ்வரா. மற்றொன்று அகில இந்தியா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகன் பிரியங்க் கார்கே.
பிரியங்க் கார்கேவிற்காக மல்லிகார்ஜுன கார்கே முனைப்புடன் காய்களை நகர்த்தி வருகிறார். பரமேஸ்வராவிற்கு பதவி கொடுக்கப்பட்டால் சீனியர் என்கிற முறையில் கொடுக்கப்படலாம்.
லிங்காயத்திற்கு பதவி?
இரண்டாவது உள்ள துணை முதலமைச்சர் பதவி – லிங்காயத்துகள் சமூகத்தை சேர்ந்தவராக இருக்கலாம்.
கர்நாடகாவில் லிங்காயத் மற்றும் வொக்கலிகா மிக முக்கிய சமூதாயங்கள். சிவக்குமார் வொக்கலிகா சமூதாயத்தைச் சேர்ந்தவர்.
2028-ம் ஆண்டு, கர்நாடகா சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது. அதை மனதில் வைத்து, சமூதாய வாக்குகளை பெருமளவில் அள்ள இன்னொரு துணை முதலமைச்சர் பதவியை லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது ஜோதிடர் குறித்துக் கொடுத்த நாள் மற்றும் ராகுல் காந்தி ‘Schedule free’ ஆன நாளான வருகிற ஜூன் 3-ம் தேதி, சிவக்குமார் கர்நாடகா முதலமைச்சராகப் பதவி ஏற்க இருக்கிறார்.
அன்று தெரியும் கர்நாடகா காங்கிரஸின் துணை முதலமைச்சர் செலெக்ஷன்!




