கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.
இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பிரச்சார வாகனத்தில் நின்றபடி பேசிய அண்ணாமலை, ” கரூரில் தனி சரித்திரம் படைத்து வருகிறோம். கடந்த 5 ஆண்டுகள் அண்ணன் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல.
அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்று உங்களுக்கு தெரியும். ஆனால், எதிரணி வேட்பாளர் பெயர் தியாகராஜன் என்று கூறுகின்றனர். உண்மையான வேட்பாளர் அவரில்லை. சட்டை அவரோடது தான். ஆனால் மாப்பிள்ளை அவரில்லை. என்பது போல உள்ளது.
அவர்களுக்கு புழல் சிறையில் தனி அறை தயாராக உள்ளது. ஆட்சி மாற்றம் வந்த பிறகு அரசியலுக்கு எதற்கு வந்தோம் என்று செந்தில் பாலாஜி வருத்தப்படுவார். இந்த முறை வெறும் 441 நாள் மட்டும் கிடையாது.
‘புதுசா வரவங்களுக்கு (விஜய்) ஓட்டு போடலாமான்னு இளைஞர்கள் என்னிடம் கேட்குறாங்க’. 1 கோடியே 23 லட்சம் பேர் 29 வயதுக்கு குறைவான வாக்காளர்கள் இந்த தேர்தலில் ஓட்டு போட உள்ளனர்.
உங்களுக்கான கட்சி NDA கூட்டணி கட்சிகள்தான். விளையாட்டாக இந்த தேர்தலை இங்கி, பிங்கி, பாங்கி தேர்தலாக மாற்றி விடாதீர்கள். இனாம் நில பிரச்சனை நோட்டீஸ் கொடுத்ததற்குதான், பெண்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

நாளை கரூரில் இனாம் நில பிரச்னை தொடர்பான பொதுக்கூட்டம் அண்ணன் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற உள்ளது.
நானும் இது குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்ய உள்ளேன். தெம்பு, திராணி, தைரியம் உள்ளவர்கள், கோவைக்கு சென்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கிறேன்” என்றார்.




