திருச்சியில் பா.ஜ.க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“கடந்த ஜூன் 12ந-ம் தேதி திறக்கப்பட்டிருக்க வேண்டிய மேட்டூர் அணை, உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை. தற்போது, அணையைத் திறந்து வைக்க முதலமைச்சர் சென்றதற்கே 5 கோடி ரூபாய் வரை மக்கள் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்தில் அதன் மொத்த கட்டுமானச் செலவே 4 கோடி ரூபாய் தான். ஆனால், இப்போது வெறும் அணை திறப்பு விழாவுக்கு இவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது. ஒரு காஸ்ட்லி முதலமைச்சராக விஜய் செயல்படுகிறார். காவிரி நீரைத் திறந்து விடக் கோரி கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஆனால், முதலமைச்சர் இதுகுறித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
இத்தனைக்கும் தமிழக ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிதான் கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது. அப்படியிருந்தும், தமிழக அரசு காவிரி நீரைப் பெற அழுத்தம் தராமல் மௌனம் காப்பது ஏன்? தற்போது, திறந்து விடப்பட்டுள்ள காவிரி நீர், கடைமடைப் பகுதிகளுக்குச் சென்று சேரவே குறைந்தது 12 நாட்கள் ஆகும். முறையான பாசன நீர் கிடைக்காததால் ஏற்கனவே 2 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பயிரிடப்படாமல் பாழாகிக் கிடக்கின்றன. இதனால், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்குத் தமிழக அரசு உடனடியாக உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவுப்படி, ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி தண்ணீரும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சேர்த்து 94 டி.எம்.சி தண்ணீரும் கர்நாடகா திறந்து விட்டு இருக்க வேண்டும். ஆனால், அந்த அளவிற்குத் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால், தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் முதலமைச்சர் நிறைவேற்றவில்லை. இதுதான் த.வெ.க அரசின் தற்போதைய அவல நிலை. சட்டமன்ற நடைமுறைகளில் தேவையின்றி மத விவகாரங்களைப் புகுத்துகிறார்கள். இந்துக்களும் இதுபோன்று தங்கள் மதம் தான் முக்கியம் எனக் கூறத் தொடங்கினால், இந்த அரசு நீடிக்குமா என்பதை ஆட்சியாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இங்குள்ள கூட்டணிக் கட்சிகளுக்குள் எந்தவொரு கொள்கை ஒற்றுமையும் இல்லை. காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்கிறார்கள். ஆனால், த.வெ.க தரப்பிலோ, ‘விஜய்தான் பிரதமர் வேட்பாளர்’ என்கிறார்கள். பிரதமராவதற்கு யாருக்குத் தகுதி இருக்கிறது என்பது இரண்டாவது விஷயம். ஆனால், தங்களுக்குள் இப்படி ஒருமித்த கருத்து இல்லாமல் முரண்பட்டுக் கொண்டிருக்கும் இவர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மைகளைச் செய்யப் போகிறார்கள்? மற்றொருபுறம், காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் தன் பதவியை ராஜினாமா செய்வேன் என்று மிரட்டுகிறார். இப்படித்தான் தற்போதைய அரசு குழப்பமாகச் சென்று கொண்டிருக்கிறது. சட்டமன்ற நேரலையை மக்கள் மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பதாக அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அவையில் நடக்கும் தரம் தாழ்ந்த விவாதங்களையும், ஆட்சியாளர்களின் செயல்பாடுகளையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்றார்.




